Home இலங்கை அரசியல் யாழ். செம்மணிப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

யாழ். செம்மணிப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

0

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி
குமாரசாமி கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை செம்மணி
பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு, அங்கு புதைக்கப்பட்ட
ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

செம்மணிப் படுகொலை நினைவேந்தல் பேரவையின் தலைவர் கிஷோர் தலைமையில் இன்று மாலை
நினைவேந்தல் இடம்பெற்றது.

நினைவேந்தல்..

இந்த நினைவேந்தலில் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் மயூரன்
உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1996 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 7ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம்
சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த
போது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு  படுகொலை செய்யப்பட்டார்.

கிருஷாந்தியை, செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைத்திருந்ததை பிரதேச மக்கள்
அவதானித்ததையடுத்து மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா, மாணவியின்
சகோதரன், குமாரசாமி பிரணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில்
வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய
சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ
முகாமில் விசாரித்துள்ளனர்.

அதனையடுத்து மாணவியைத் தேடிச் சென்ற மூவரையும் இராணுவத்தினர் படுகொலை
செய்ததாகவும் கூறப்படுகின்றது.

அன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்கள் செம்மணி
பகுதியில் உள்ள வயல் வெளியில் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்  நினைவேந்தல்

சுண்டுக்குளி மகளிர் கல்லுரி மணவியான கிருசாந்தி உள்ளிட்ட செம்மணியில் கொன்று
புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து நினைவேந்தல்
இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

செம்மணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் மாலை 5 மணியளவில் இந்த
நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து
ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள்
மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டனர்.  

NO COMMENTS

Exit mobile version