Home இலங்கை அரசியல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை கொலை செய்யுமாறு கட்டளையிட்ட சிவசங்கர் மேனன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை கொலை செய்யுமாறு கட்டளையிட்ட சிவசங்கர் மேனன்

0

விடுதலைப் புலிகளின் தலைவரை கொலை செய்வது தொடர்பான ஆலோசனையை மகிந்த அரசாங்கத்திற்கு, இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன்  வழங்கியதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

இறுதிபோர்க் களத்தில் புதுமாத்தளன் பகுதியில் வைத்து  தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் சுற்றிவளைக்கப்பட்ட போது, அன்றிருந்த இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன்,  பெரியதாக ஒன்றும் செய்ய வேண்டாம்.  தமிழ்நாடு தேர்தல் முடியும் வரை காத்திருக்குமாறு  முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தெரிவித்தார் என்றும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார். 

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“அச்சந்தர்ப்பத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சி விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள், பேர்டினன்ட் மற்றும் இன்றிருக்கும் அண்ணாமலை போன்றோரும் அதில் உள்ளடங்குவர்.

பாரதிய ஜனதா கட்சி

மோடியும் அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட பின்னர், அகண்ட பாரதத்தின் ஒரு பகுதி என்று இலங்கையை தெரிவித்திருந்தார். இதில் பாரிய மறைமுக அரசியல் அரங்கங்கள் செயற்படுகின்றன.

நாங்கள் எதிர்பார்க்காத நிலையில், காங்கிரஸ் கட்சி வெற்றியை பெற்றுவரும் போது, சிவசங்கர் மேனனும், முடித்துக் கொள்ளுங்கள் என எங்களுக்கு கட்டளை வழங்கினார்.

அதற்கு முன் சம்பந்தன் மற்றும் இலங்கையின் தமிழ் தலைவர்கள், கருணாநிதி, ஜெயலலிதா, சர்வதேச, உள்ளூர் தமிழ் தலைவர்கள் அனைவரும் சந்தித்தி பேசினர்.
அச்சந்தர்ப்பத்தில், இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை சுற்றிவளைத்ததால் அவரை மீட்பதா என கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

மேலும், கனடா உட்பட குமரன் பத்மநாபன் ஊடாக சர்வதேச ஒத்துழைப்பும் மேற்கொள்ளப்பட்டது.
அதனுடாக விடுதலைப் புலிகளின் தலைவரை கடல் மார்க்கமாக கொண்டு செல்வதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு அமெரிக்காவின் மெரைன் ஒத்துழைப்பும் பெறப்பட்டது.
இறுதியில் சம்பந்தன் உட்பட அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் தலைவர்களும் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர்.

அமெரிக்காவின் உதவி 

குறிப்பாக ஜெயலலிதாவின் கூற்றில், “நான் தான் உலக தமிழ் தலைவர்களின் தலைவி, ஆனால் பிரபாகரன் சர்வதேச தமிழர்களின் தலைவராக நினைக்கிறார். அவருக்கு முடிவு கட்டவும்” என்று சொல்லியுள்ளார். இந்த சம்பாசனைகள் அனைத்தும் சிவசங்கர் மேனனுடனான இறுதி சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாகும்.

பலத்துடன் இருக்கும் போது கொண்டாடுவார்கள். ஆனால் பலம் குறைந்து விட்டால் அனைவரும் சேர்ந்து மிதிப்பார்கள். இது உலக நியதி. இன்றிருக்கும் தலைவர்களுக்கும் இவை படிப்பினையாகும்.

ஆனால், இறுதி யுத்தத்தில் அமெரிக்கா, கடற் புலிகளின் வலுவை இல்லாதொழிக்க உதவி செய்வதற்கு காரணம் ஒன்று உள்ளது. அதாவது யேமனிலுள்ள அமெரிக்க தளத்திற்கு அல்கொய்தா தாக்குதல் நடத்தியது. அதன் தொழில்நுட்பத்திற்கு விடுதலைப் புலிகளே உதவியது நிரூபணமானதால் அமெரிக்கா எங்கள் பக்கம் சார்ந்தது.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அவுஸ்திரேலியா கடல் பரப்புக்கு சென்று விடுதலைப் புலிகளின் கப்பல்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்றவற்றை முறியடிக்க அமெரிக்காவும் உதவியது. அவ்வாறு செய்திருக்காவிட்டால் இன்று யுத்தம் முடிவில்லாமல் தொடர்ந்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version