பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை விசேட அனுமதி ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த மாத பயணச்சீட்டை சமர்ப்பித்து அந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
மூடப்பட்ட பாடசாலைகள்
இதேவேளை, நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை (16) மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சு (Moe) அறிவித்துள்ளது.
மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை நாளை முதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நிதியை திரட்டும் நோக்கில், ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்க ஆசிரியர்கள் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் மகிந்த ஜயசிங்க குறிப்பிட்டார்.
