இலங்கை(sri lanka) – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இலங்கை கடற்றொழிலாளர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய கடற்றொழிலாளர் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு(Jaffna) வருகை
தந்துள்ளனர்.
இதற்கமைய வவுனியாவில்(Vavuniya) நாளை இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தை
நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின்,
ஜெர்மனியஸ் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழு இன்று(25) செவ்வாய்க்கிழமை விமான
மூலமாக யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தது.
இரு நாட்டு கடற்றொழிலாளர்கள்
இதில் ஏற்கனவே நாகபட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இங்கு இருப்பதால்
அவருடன் சேர்ந்து 6 பேர் கொண்ட குழு நாளை(26) புதன்கிழமை வவுனியாவில் உள்ள தனியார்
விடுதியில் இரு நாட்டு கடற்றொழிலாளர்கள் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தை நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை கடற்றொழிலாளர்கள் சார்பில் சுப்பிரமணியம் (யாழ்ப்பாணம்), மரியராசா
(முல்லைத்தீவு), ஆலம் (மன்னார்), பிரான்சிஸ் (கிளிநொச்சி), அந்தோனிப்பிள்ளை
(கிளிநொச்சி), சங்கர் (மன்னார்), இராமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), அன்னராசா
(யாழ்ப்பாணம்), வர்ணகுலசிங்கம் (யாழ்ப்பாணம்) உள்ளிட்ட 12 பேர் இந்தப்
பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கின்றனர்.
இரு நாட்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வு எட்டப்படுவது தொடர்பாக
முதல் கட்டமாக இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களிடையே கடற்றொழிலாளர்களின் சொந்த முயற்சியில்
பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை முடிவு
செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
