Home இலங்கை அரசியல் தமிழ் மக்களுக்கான அரசியல் வழிநடத்தல் தொடர்பில் சிறீரங்கேஸ்வரன் கேள்வி

தமிழ் மக்களுக்கான அரசியல் வழிநடத்தல் தொடர்பில் சிறீரங்கேஸ்வரன் கேள்வி

0

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு
சரியான அரசியல் வழிநடத்தலை காண்பிக்க முடியுமா என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின்
ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (27.08.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தமிழ்ப் பொது
வேட்பாளர் விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்டபோதே அவர் இவ்வாறு
வினவியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,  

“ஜனாதிபதித் தேர்தலில் சந்தர்ப்பவாதிகளாக கட்டமைப்பை உருவாக்குவதாக கூறியவர்களில்
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை
வெளியிட்டுள்ளனர்.

காணி அதிகாரம்

இது அரசியல் இலக்கற்ற சந்தர்ப்பவாத செயற்பாடு என ஏற்கனவே
நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். அது இப்போது நடைமுறையில் அரங்கேறிவருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் மக்கள் உன்னிப்பாக அவதானித்துக்கொள்ள வேண்டும்.

பொதுக்கட்டமைப்பு என கூறிக்கொண்டவர்களில் ரெலோ அமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்.

இது அந்த கட்டமைப்பு என சொல்லிக்கொள்வதில் தமிழ் மக்களுக்கான எவ்வித அரசியல்
வழிகாட்டல்களையும் காண்பிக்காமல் ஜனாதிபதிக்கு ஆதரவை தெரிவிப்பதும் அவரை
சந்திப்பதும் ஒருபுறத்திலும் மறுபுறத்தில் தமிழரின் அடையாளம் என்று பேசிக்கொள்வதும் தேர்தல் பித்தலாட்டமாகவே காணமுடிகின்றது.

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு
சரியான அரசியல் வழிநடத்தலை காண்பிக்க முடியுமா என சிந்தித்தால் அது தமிழ்
மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு சங்கு ஊதுவதாகவே முடியும்.

இதேநேரம், எமது கட்சி ஆதரிக்கும் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றால் மாகாணசபைக்குரிய
அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன் குறிப்பாக காணி அதிகாரமும் வழங்கப்படும்.

தேசிய மக்கள் சக்தி

அதேநேரம், பொலிஸ் அதிகாரத்தை அமையவுள்ள நாடாளுமன்றில் விவாதித்து அதனூடாகவே
தீர்மானிக்கப்படும் என்று கடந்த கால வரலாறுகளிலிருந்து கூறியிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது நாடு நெருக்கடியான காலத்தில் இருந்தபோதும் அதை பொறுப்பெடுத்து
மீட்சிபெற செய்துவருகின்றார்.

இவற்றுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அரசியல் உரிமைசார் பிரச்சினை
இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டு செயற்படுகின்றார்.
ஆனால், சஜித் பிரேமதாசாவை எடுத்துக்கொண்டால் அவர் வடக்கு கிழக்கில் 1000
விகாரைகளை கட்டவேண்டும் என்கிறார்.

அதனூடாக இந்த நாடு ஒரு பௌத்த நாடு என்பதை பிரகடனப்படுத்துகின்றார். அதேபோன்று, நாமல் ராஜபக்ச மாகாணசபை அதிகாரங்களைக் கூட கொடுக்க மறுக்கின்றார்.

மற்றொரு வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்கவை எடுத்துக்கொண்டால் நிலத்தொடர்புடன்
தமிழ் பேசும் மக்கள் இருந்துவந்த வடக்கு கிழக்கை பிரித்து தமிழ் மக்கள்
ஒருபோதும் ஒருசேர தாயக நிலத்துடன் இருக்க கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இநேதேரம், எமது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் நிலைப்பாடு மதசார்பற்றதாகவே
இருக்கின்றது. அந்தவகையில் ஒரு மதமோ அல்லது மொழியோ இன்னொரு மதத்தையோ மொழியையோ
ஆழமுடியாது என்பதாகவே உள்ளது.

தற்போது வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய மக்கள்
சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம்
வெளியிடப்பட்டுள்ளது.

யதார்த்தமற்ற அறிக்கை

அதில் 70 ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் அரசியல்
அபிலாசைகள் எதுவும் கருத்திற்கொள்ளப்படவில்லை. குறைந்தபட்சம் மாகாண
சபைகளுக்கான அதிகாரங்கள் பகிர்வு தொடர்பாக கூட கூறப்படவில்லை.

அதேவேளை, மூன்று
நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஜே.வி.பி புதிய அரசியல் அமைப்பொன்றை
உருவாக்குவதென்பதும் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பெரும்பான்மை
பெறுவதென்பதும் சாத்தியமற்றதொன்று.

அதேவேளை, இருக்கின்ற மாகாண முறைமைக்கு அதிகாரங்களை பகிரமுடியாதவர்கள், புதிய
அரசியலமைப்பினூடாக தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை அங்கீகரிப்பார்கள்
என்பதும் அதனை ஜே.வி.பி செய்வதென்பதும் தமிழ்மக்களை முட்டாள்கள் என
சித்தரித்தே ஜே.வி.பி இவ்வாறு கூற முனைகின்றது.

இதேநேரம், தற்போதைய விஞ்ஞாபனத்தில் இருக்கின்ற மாகாணசபையை கூட மாவட்ட சபைகளாக்க
அவர் முயற்சி செய்கின்றார்.

அவரது ஆக்ரோசமான பிரசாரங்களை பார்த்த மக்கள்,
அவர்களது விஞ்ஞாபனத்தில் புதிதாக ஏதும் இருக்குமா என ஆராய்ந்து பார்த்தால்
எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

அந்த வகையில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல்
பிரகடனம் யதார்த்தமற்ற அறிக்கையாக மட்டுமே வெளிவந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version