கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இலங்கை தொடருந்து திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், விவசாய
நடவடிக்கைகளுக்கு இடையூறின்றி அதனை அணுகும் வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கலந்துரையாடல்
நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக்
கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் நேற்றையதினம் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட
விவசாயிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.
தர்மக்கேணி பகுதியில் தொடருந்து ஓடுபாதைக்கு அருகில் விவசாய நடவடிக்கை
மேற்கொள்ளப்படுவதாகவும், உடனடியாக அவற்றை இடைநிறுத்துமாறும் தொடருந்து திணைக்களத்தால் குறித்த விசாயிகள் மீது பொலிஸ் முறைப்பாடு
பதிவு செய்யப்பட்டிருந்தது.
இணக்கப்பேச்சு
இந்த நிலையில் அது குறித்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தியதை அடுத்து உரிய தரப்பினருடனான
இணக்கப்பேச்சுகளின் மூலம் விவசாயிகளுக்கு போதிய கால அவகாசம்
பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன், எதிர்வரும் காலங்களில் புகையிரத திணைக்களத்தின்
அனுமதியுடன் குத்தகை அடிப்படையில் குறித்த நிலத்தைப் பெற்று விவசாயம்
செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன்,
உபதவிசாளர் சிவகுரு செல்வராசா, முத்துக்குமார் கவிப்பிரகாஸ்
ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
