Home முக்கியச் செய்திகள் இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !

இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !

0

Courtesy: குந்தவி

இலங்கைத்தீவு சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தின் அடிமை தேசமாக இருந்த காலப்பகுதியில் முதலாளித்துவ உதய காலத்தில் இருந்த அமெரிக்கா மதம் பரப்பும் நோக்கத்துடன் கல்வி நிறுவனங்களை இலங்கையின் வடபாகத்தில் நிறுவியது.

இதனூடாக கல்வி வாய்ப்புக்கள் பெற்றோரை அரச சேவைகளில் அமர்த்தியதனூடாக தொடர்ந்து கிளர்ந்தெழுந்து கொண்டிருந்த பெரும்பான்மை மக்களுக்கு தங்களது பிரித்தாளும் சூழ்ச்சியின் திறனை காலணித்துவ ஆட்சியாளர்கள் உணர்த்தினர் எனலாம்.

அன்னார் இராஜவரோதயம் சம்பந்தன் யாழ் பரியோவான் கல்லூரியில் கல்வி பெற்று வழக்குரைஞராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த நிலையில் திருமலையின் முன்னாள் நாடாளுமன்ற பிரதிநிதிகளில் ஒருவர் இரும்பு மனிதர் என்று லீலா நாட்காட்டியால் கொண்டாடப்பட்ட இராஜவரோதயத்தின் நெருங்கிய உறவினர் என்பதால் தமிழரசுக் கட்சி அன்னாருக்கு செங்கம்பள வரவேற்பளித்தது.

ஆண்டுகாலமாக அடிமை நாடாக வதைக்கப்படதால் வளமான நிலப்பிரபுத்துவத்தை வரலாற்றில் கொண்டிருந்த இலங்கைத்தீவு முலாளித்துவ வளர்ச்சிக்கான உட்கட்டுமானத்துக்காக 1950 களில் உலக வங்கியிடம் கையேந்தியது.

ஆங்கிலேயஆட்சியாளர்கள்

உலக வங்கியும் பாரிய தொழில்களில் ஈடுபடலாகாது என்பது போன்ற நிபந்தனைகளோடு ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் முன் கதவால் வெளியேற பின்கதவால் கடன் என்ற வடிவில் வந்து மெய்யான ஆட்சியாளராக காலூன்றியது.

இரண்டு மடங்கான சனத்தொகை போன்ற காரணிகளால் வேலையின்மை தலைவிரித்து ஆடிய நிலையில் தங்களது ஆட்சியதிகாரத்தைக் காத்துக் கொள்வதற்காக தமிழ் மற்றும் சிங்கள மக்களை மோத விடுதல் என்ற உத்தியை இலங்கை ஆளும் வர்க்கம் கைக்கொண்டது.

இதற்கெதிராக சிறுபான்மை மக்கள் மத்தியில் உருவான எதிர்ப்பை தமிழரசுக்கட்சி தனது வாக்கு வேட்டைக்கு பயன்படுத்திக் கொண்டதுடன் வேலைவாய்ப்பற்ற பெரும்பான்மை சிங்கள இளைஞர்கள் கிளர்ச்சியைக் கைக்கொள்ள 1972 குடியரசு யாப்பினூடாக தமிழ்மக்கள் மீதான ஒடுக்குமுறையை இலங்கை ஆளும் வர்க்கங்கள் தீவிரப்படுத்தி வந்தது.

தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் உருவாகி வந்த போராட்ட உணர்வால் தங்களது கிரீடம் பறி போய்விடக்கூடும் என்ற அச்சத்துக்குள்ளான தமிழரசுக் கட்சியும் மற்றும் சகாக்களும் தமிழரசு என்ற வழிக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற ஊடாக வந்து சேர்ந்தனர்.

1977 பொதுத் தேர்தலானது தமிழரசை உருவாக்க கோரும் மக்கள் ஆணையைக் கோரும் பொது வாக்பெடுப்பாக பிரடனப்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில்  இதன் காரணமாக இளைஞர் மற்றும் யுவதிகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்காக வாக்கு வேட்டையில் இறங்கினர்.

இத்தேர்தலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருமலைத் தொகுதியிலிருந்து இரா.சம்பந்தன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் நெப்போலியன் காலத்திலிருந்து இலங்கைத் தீவின் குறிப்பாக இயற்கைத் துறைமுகமான திருகோணமலைக்காக சர்வதேச ஏகாதிபத்திய கெடுபிடிகள் மோதிக்கொண்டே இருக்கின்றனர்.

இரண்டாம் உலக மகாயுத்தம்

இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் இன்றைய இங்கிலாந்து மன்னரின் மாமனார் கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட நிலக்கீழ் எண்ணெய்த்தாங்கிகள் இன்று இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ளது அத்தோடு திருமலையைச் சேர்ந்த மூத்த அரசியல் செயற்பாட்டாளரொருவர் நகைச்சுவையாக சம்பந்தன் ஐயாவுக்கு மாவட்ட ரீதியாக திணிக்கப்படும் குடியேற்றங்கள் பற்றியோ விடுதலைக்காக போராடியவர்களின் மறுவாழ்வு பற்றியோ கொஞ்சமும் கரிசனையில்லை.

ஆனால் திருமலைத் துறைமுகம் உள்ளிட்ட பிராந்தியத்தில் இந்தியாவைத் தவிர வேறு எந்த சக்தியாவது காலூன்ற முயலும் பட்சத்திலேயே அன்னார் போராட அறிவுரை தெரிவிப்பார் என்பார் இந்தநிலையில் இவ்வாறான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாத செயற்பாடுகளால் கூட்டமைப்பா இந்திய நாட்டமைப்பா என்ற வெகுசனக் கேள்வியை மூத்த எழுத்தாளர் சுபா பொது வெளியில் வைத்தார்.

1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பெற்று வந்த கூட்டணியினர் மீது கண்டன விமர்சனமாக கட்டுவன் சந்தியில், கேட்டது தமிழீழம் கிடைத்தது ஜப்பான ஜீப் என்ற சுவர் கருத்துப்படம் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து இளைஞர் இயக்கங்களின் குறிப்பாக ஈழ மாணவர் பொது மன்றம் மற்றும் திருவிழா போன்ற நாடகங்களால் நாடாளுமன்றப் பாதை பாடையேற்றப்பட்டது.

ஜே.ஆர் ஜெயவர்த்தனா தனது பங்கிற்கு, தமிழ் பேசும் மக்களின் அபிப்பிராயம் பற்றி எனக்கு கவலையில்லை என்று கர்ச்சித்ததோடு நின்று விடாது எதிர்க்கட்சி கௌரவத்தை கொண்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியைப் நாடாளுமன்றிலிருந்தே வெளியேற்றினார்.

இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்த த.வி.கூ தலைவர்களே பேச்சு வார்த்தைகளிலும் மற்றும் மாநாடுகளிலும் கலந்து கொள்ள சம்பந்தர் ஐயா காணாமால் போனார் அத்தோடு மீண்டும் இந்திய அமைதிப்படை காலத்தில் நாடாளுமன்றப் பாதை மீள் திறக்கப்பட்ட போது 1989 தேர்தலில் திருமலையில் வெற்றி பெற்ற தனது முன்னாள் தொண்டன் ஈரோஸ் இரத்தினராஜாவிடம், தம்பி இத்தேர்தலில் தயவுசெய்து நீங்கள் போட்டியிட வேண்டாம் என்று கெஞ்சுமளவுக்கு மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு உயர்ந்திருந்தது.

அஞ்ஞாதவாசத்திலேயே என் காலம் போய்விடுமோ? என்ற அச்சத்திலிருந்த ஐயாவுக்கு பேச்சுவார்த்தை மேசைக்கு போன புலிகள் ஒளிவிளக்கானார்கள் அத்தோடு சர்வதேச அங்கீகாரத்தை ஈட்ட பன்முகத்தன்மை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆயுதப் போராட்டம்

TELO, EPRLF மற்றும் TULF போன்ற அமைப்புக்கள் இதில் அங்கம் வகித்ததுடன் இவர்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 1983 ஜூலைக் கலவரத்தை ஒட்டி இந்தியாவில் அடைக்கலம் புகுந்த நாள் முதல் ஆயுதப் போராட்டத்தை சமரச வழியில் சீரழிக்க இந்திய ஆளும் கும்பலுடன் திட்டம் தீட்டி வந்தது.

ஈழப்போராளிக் குழுக்களில் இருந்து இந்திய கைக்கூலி அமைப்பு ஒன்றை உருவாக்க இந்திய உளவுப்படை (RAW) றோ முதலில் அணுகிய அமைப்பு தமிழீழ விடுதலை இயக்கம் ஆகும் அத்தோடு இதில் வெற்றி கண்டு ஆரத் தழுவி அணைத்துக் கொண்ட இயக்கமாகும்.

1985 திம்புப் பேச்சுவார்த்தைக்குப் பின்னால் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க றோவால் ஏவப்பட்ட இயக்கமாகும் அத்தோடு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது குட்டி முதலாளித்துவ நிலைப்பாடு காரணமாக சோவியத் சமூக ஏகாதிபத்திய ஆதரவு திரிபுவாதிகளும் நாடாளுமன்ற வாதிகளுமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் CPI ஈழப்போராட்டத்துக்கு வழிகாட்டுதல் பெறவிளைந்து இந்திய விஸ்தரிப்புவாதத்தின் காலில் விழுந்தது.

1985 ஆரம்பத்திலேயே அதாவது திம்புப் பேச்சுவார்த்தைக்கு முன்னாலேயே ஈழப் பிரிவினை குறித்த நிலைப்பாட்டில் ஊசலாடத் தொடங்கிவிட்ட நிலையில் இந்த இந்திய சார்பு அணிக்கு தலைமை வகுத்தவர் இந்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் அடியாளாக EPRLF இற்குள் இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆவார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் இந்த மூன்று அணியினரும் ஏற்றுக் கொண்டு மாகாண சபையை அங்கீகரித்து இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் கூட்டணி அமைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை வேட்டையாடி இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த தமிழீழ மக்களுக்கு எதிராக கொலை வெறித் தாண்டவத்தைக் கட்டவிழ்த்தனர்.

அமிர்தலிங்கம் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு இந்தியப்படை இருப்பது அவசியம் என்றும் இந்தியப் படையின் கையில் இருக்கும் துப்பாக்கிகள் சட்டபூர்வத் துப்பாக்கிகள் என்றும் தெரிவித்துள்ளதுடன் சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ் அசோக்கா ஹொட்டேலில் ஈழ வதை முகாம் நடத்தி நல்லாட்சி புரிந்து வந்தார்.

விடுதலைப் புலிகளின் வீரம் 

எனினும் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த விடுதலைப் புலிகளின் நீதியான வீரம் செறிந்த வரலாறு படைத்த தமிழீழ விடுதலை யுத்தம் வெற்றி வாகை சூடி இந்திய ஆக்கிரமிப்புப் படை தோற்கடிக்கப்பட்டதுடன் இவ்வாறு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழமண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது.

இந்திய ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டமைத்துக் கொண்ட தமிழினத் துரோகிகள் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு கொழும்பிலும் மற்றும் இந்தியாவிலும் உதிரிகளாக தஞ்சம் புகுந்தனர் அத்தோடு தேடுவாரற்று தெருவில் கிடந்தனர்.

மாகாண முதலமைச்சர் வரதராசப் பெருமாள் பதவி துறந்து தமிழீழப் பிரகடனம் செய்து விட்டு ஒரிசாவில் அஞ்ஞாதவாசம் புரிந்தார் இந்தநிலையில் தமிழீழ விடுதலைப் போரை தொடரும் பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கையில் தனியாக விடப்பட்டதுடன் இந்தப் பணியைப் பொறுப்பேற்று இறுதிவரை விடுதலைப் போரைத் தொடர விடுதலைப் புலிகள் திடசங்கற்பம் பூண்டிருந்தனர்.

இவ்வாறுதான் ஈழவிடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஏகபோகம் தனித்த தலைமைத்துவம் நிலைநாட்டப்பட்டது இவ்வாறு விடுதலைப் புலிகள், பாசிசப் புலிகளாகி 1989 இறுதியில் இருந்து 2002 வரை சுமார் 13 ஆண்டுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்தி வந்ததுடன் இந்த ஆண்டுகளில் எண்ணற்ற இராணுவ சாதனைகள் புரிந்தனர்.

தமிழீழ மண்ணின் பல பகுதிகளில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவம் விரட்டியடிக்கப்பட்டதுடன் எதிரியிடமிருந்து விடுவிக்கப்பட்ட தளப்பிரதேசங்கள் உருவாகின இதனால் விடுதலை இயக்கம் பெரு வளர்ச்சி கண்ட நிலையில் இதன் விளைவாக ஆனையிறவுப் பெரும்படைத்தளம் விடுதலைப்புலிகளின் கையில் வீழ்ந்தது.

ஆறையிறவின் வெற்றியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை நோக்கிய முன்னேற்றத்தைக் கைவிட்டு சிங்களத்துடன் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண முயலுமாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் இந்திய விரிவாதிக்க அரசாலும் விடுதலைப் புலிகள் மிரட்டப்பட்டனர்.

தமிழீழ விடுதலை இராணுவம்

அமெரிக்க இந்தியப் படைகளின் ஒருமித்த தாக்குதலில் இருந்து தமிழீழ விடுதலை இராணுவத்தைப் பாதுகாக்க விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதென சரியாகவே முடிவு செய்தனர் இது முதல் மிகவும் காலம் தாழ்த்தி தமிழ்ச் செல்வன் பேச்சுவார்த்தைக் களத்தைப் பொறுப்பேற்கும் வரையான காலம் வரை அன்ரன் பாலசிங்கத்தின் செல்வாக்கில் புலிகளின் அரசியல் வழி நடந்தது.

எரிக் சொல்ஹெய்மின் வார்த்தைகளில் சொன்னால் “பிரபாகரனை நேரில் சந்தித்து கலந்துரையாடி தமது கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும்படி எவரும் கேட்க முடியாது அத்தோடு அவர் அத்தகைய தலைவர் அல்ல அந்த நிலையில் இருந்த ஒரே நபர் அன்ரன் பாலசிங்கம் மட்டும் தான் எனவே நாம் பாலசிங்கம் ஊடாக பிரபாகரனை வழிப்படுத்த முயன்றோம் பாலசிங்கம் உயிரோடு இருந்தவரையில் அது வெற்றியும் அளித்தது அத்தோடு இந்த வெற்றிகளில் முக்கியமானது தமிழீழத்தைக் கைவிட்டு, பிரிந்து செல்லும் உரிமையைக் கைவிட்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கைவிட்டு, திம்புக் கோரிக்கையைக் கைவிட்டு மற்றும் வருடாவருடம் மாவீரர் உரையின் தாரக மந்திரமாக இருந்த புலிகளின் தாகத்தையும் மறந்து ஒரு புதிய பொது வாக்கெடுப்பைக் கூட கோராமல் ஒற்றையாட்சிக்குள் அகசுயநிர்ணய உரிமை” அடிப்படையில் அதிகாரத்தைப் பங்கீடு செய்யலாம் என்று புலிகளை நம்ப வைத்த பாலசிங்கத்தின் சதி ஆகும்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பான அரசியல் பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்கேற்பவர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது விடுதலைப் புலிகள் தமது 13 ஆண்டுகால தனியான அரசியல் தலைமைத்துவத்துக்கு ஜனநாயக வடிவம் கொடுக்க முயன்ற நிலையில் இந்த முயற்சியின் விளைவே கூட்டமைப்பாகும்.

நோர்வே பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொள்ளும் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்டவர்கள் எனக் காட்டவும் ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய விரிவாதிக்க அரசும் தமது செல்வாக்கை தமிழ் மக்களிடையே நிலைநிறுத்த கோரிவந்த அரசியல் பன்முகத் தன்மை கோரிக்கையோடு கோட்பாடற்ற சமரசம் செய்து கொண்ட சந்தர்ப்பவாத நிலைப்பாட்டின் காரணமாகவும் விடுதலைப் புலிகள் இக்கூட்டமைப்பை உருவாக்கினர்.

தேர்தல் விஞ்ஞாபனம்

கூட்டமைப்புக்கு ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுதிக் கொடுத்து தேர்தலில் நிறுத்தி வீட்டுக்குப் போக வீட்டுக்குப் போடுங்கள் எனத் தேர்தல் பிரச்சாரம் செய்து கூடவே வாக்கும் அளித்து நாடாளமன்றத்துக்கு அனுப்பியதுடன் இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்றும் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த எந்தப் பேச்சுவார்த்தைகளும் அவர்களுடனேயே நடத்தப்படவேண்டும் எனக் கோரியிருந்தது.

இக்காலத்தில் விடுதலைப் புலிகளின் காட்டில் மும்மாரி பொழிந்தது, காளான்களும் கண்மண் தெரியாமல் முளைத்தன, விச ஜந்துக்களும் வெள்ளத்தில் நீந்தி மகிழ்ந்தன, இவர்களுக்குப் பொதுவாக சூட்டப்பட்ட அல்லது இவர்கள் பொதுவாகச் சூடிக் கொண்ட கிரீடம் அரசியல் ஆய்வாளர் என்பதாகும்.

இந்த அரசியல் ஆய்வாளர்கள் தமது பங்கிற்கு அமெரிக்காவும், ஐரோப்பியன் ஜூனியனும் மற்றும் இந்தியாவும் விடுதலைப் புலிகளை அங்கீகரித்து நடத்தவுள்ள முடிசூட்டு விழாவுக்கு கூட்டமைப்பு ஒரு போர்வாள் என ஆய்ந்து அறிந்து கூறி வந்தனர்.

இவ்வாறாகத்தானே கூட்டமைப்புச் சேனை நாடாளுமன்றத்தைப் போர்க்களமாக்க புழுதி வீசி எறிந்த வண்ணம் புறப்பட்டது 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற இவர்களின் முதலாவது தேர்தலில் உயர்பாதுகாப்பு வலையங்களையும் யுத்தத்தால் ஏற்பட்ட இடப் பெயர்வுகளையும் மனதில் கொண்டு முழங்கி புலிகளின் ஆயுத பூஜையின் வரத்தால் டக்ளசுக்கு சொந்தமான இரண்டு தொகுதிகள் தவிர எஞ்சிய 24 இல் 22 பொரும்பான்மை நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி மக்கள் பிரதிநிதி ஆகியது.

நோர்வே வீசிய பாசக்கயிறு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் குரல்வளையை நெரிக்கும் வரையிலும் இவ்வாறு கூட்டமைப்பு நாடாளுமன்றத்தைப் போர்க்களமாக்கிக் கொண்டு பெரும்பாலான காலங்களில் இந்தியாவிலும் பிற மேலைநாடுகளிலும் தங்கியிருந்தது கடைசியாக முள்ளிவாய்க்கால் பிரளயம் நடந்து முடிந்து போர்க்களம் நாடாளுமன்றமானது.

யுத்தத் தளபதி பொன்சேகாக்காவுடன் கூட்டமைத்து கூட்டமைப்பு தமிழ் மக்களிடையே வாக்கு வேட்டையாடியது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு ராஜபக்சவுக்கு நன்றி செலுத்தியதுடன் புலிகளின் தியாகத்தை மதிப்பதாகவும் அவர்களின் வழிமுறையை எதிர்ப்பதாகவும் அறிவித்தது அத்தோடு யுத்தக்குற்றம் பற்றிய முறையீட்டில் கலந்து கொள்ளவில்லை பசு தனது புலித்தோலைக் கழற்றி எறிந்தது.

அரசியலில் சந்தர்ப்பவாதம் 

கேவலம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் சிங்களம் சிறைப்பிடித்து முகாம்களில் அடைத்து வைத்த இலட்சக்கணக்கான மக்களைச் சென்று பார்வையிடக் கூட இந்தக் கூட்டமைப்பு போராடவில்லை அத்தோடு விடுதலைப் புலிகள் தம்மைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று நிரூபிக்க கையில் எடுத்த துடைப்பங்கட்டை, இப்போது தன்னைத் தானே மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனப் பிரகடனம் செய்தது.

அவர்களது எதிரிகளது தடியைக் கொண்டே அவர்களுக்கு அடிப்பதாக நினைத்து புலிகள் நகர்த்திய காய் தடியைக் கொடுத்து மரண அடிவாங்கிய கதையாய் முடிந்தது அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது மரணதண்டனை தவிர வேறெதுவுமல்ல இத்தகைய சந்தர்ப்பவாதத்துக்கு மேலே குறிப்பிட்ட அரசியல் ஆய்வாளர்கள் சூட்டிய நாமம் தான் காய் நகர்த்தல் இந்தச் சொல்லே ஒரு சூதாட்ட மொழி அரசியல் மொழி கிடையாது இதுவிதம் வாய்த்த பொன்னான வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட அன்னார் தனக்கென மட்டும் வாழ்ந்தார்.

தனது வாரிசுகளாக சட்ட மேதைகளான சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் போன்றோரைக் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்தார் மக்கள் போராட்டங்களில் பங்கெடுக்காதிருக்க முதுமை ஒரு காரணமாக்கப்பட்டது இறப்பு இவரது குற்றங்களை மறக்குமா ?மன்னிக்குமா? என்ற கேள்விக்கு எம் தேசத்தில் மாண்ட எம் மக்கள் மாவீரர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று இலட்சங்கள் என்பதனையே இப்போதைக்கு ஒரு பதிலாக கொள்ளமுடியும் அத்தோடு வரலாற்றில் இரா சம்பந்தன் அவர்கள் எதுவிதம் குறிக்கப்படுவார் என்று கேட்கின்றார்கள் புலிகளின் சந்தர்ப்பவாதத்திற்கு கிடைத்த செருப்படி என்று குறித்துக் கொள்ளலாம்.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Shalini Balachandran அவரால் எழுதப்பட்டு,
01 July, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–


இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

NO COMMENTS

Exit mobile version