Home இலங்கை அரசியல் புதிய அரசாங்கத்துடன் இனப்பிரச்சினை தொடர்பில் தமிழரசுக் கட்சி உரையாடுவது அவசியம்..!

புதிய அரசாங்கத்துடன் இனப்பிரச்சினை தொடர்பில் தமிழரசுக் கட்சி உரையாடுவது அவசியம்..!

0

தேர்தல் முடிந்த பின்னர் ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களின்
இனப்பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து தொடர்பிலும் உரையாட வேண்டிய அவசியம் தமிழரசு கட்சிக்கு
நிச்சயமாக இருக்கின்றது

என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
போட்டியிடும் வேட்பாளர் ஞானமுத்து
சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பாட்டிருப்பு தேர்தல்
தொகுதிக்குட்பட்ட களுவாஞ்சிகுடி நகர் பகுதியில் இன்று (20.10.2024)
மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பரப்புரைகளின் போதே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கருத்து குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

“தமிழர்களாகிய நாம் விலை போகாத தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க இருப்பதாக
களுவாஞ்சிகுடி பிரதேச மக்கள் என்னிடம் நேரில் தெரிவித்தார்கள்.

இந்நிலையில், இந்த பொதுத் தேர்தலில் பல்வேறுபட்டவர்கள், பல்வேறு நோக்கங்களுக்காகவும், சுய
நோக்கங்களுக்காகவும், களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள், எனவே மக்கள்
தமிழரசி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

நான்கு ஆசனங்கள் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சி
மூன்று அல்லது நான்கு ஆசனங்களை பெற வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.

மக்கள் இந்த விதத்தில் மிகவும் நியாயமாக சிந்தித்து தேர்தலில் செயற்பட வேண்டும்.

மக்கள் இந்த தேர்தலில் சரியாக சிந்தித்து சரியான நபர்களை தெரிவு செய்ய வேண்டும். அதனால் எதிர்வரும் 14ஆம் திகதி எனது தமிழரசு கட்சி வெற்றி
பெற்றுள்ளது என்பதை நாம் கேட்க வேண்டும்.

எனவே, மக்கள் வீட்டு சின்னத்திற்கும்
எனது 6ஆம் இலக்கத்துக்கும் வாக்களிப்பதோடு மக்கள் விரும்பும் ஏனைய இரு
வேட்பாளர்களுக்கும் தமது வாக்குகளை செலுத்த முடியும்.

விசமத்தனமான செய்திகளை பரப்பக்கூடிய விதத்தில் சிலர் செயல்படுகின்றார்கள்.

அவையெல்லாம் அழுக்காறு காரணமாக காழ்ப்புணர்ச்சி காரணமாக, செய்யப்படுகின்ற
செயற்பாடுகளாய் இருக்கும். அவற்றை நாம் உதறித் தள்ளிவிட்டு ஊழல் மோசடி இலஞ்சம்,
கையூட்டல், இல்லாமல் அரசியல் செய்யக்கூடியவர்களையும், மக்களுக்கு சரியான
வழிகாட்டுதல் செய்யக்கூடிய வேட்பாளர்களையும், மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

தமிழ்மக்களின் பிரச்சினை

அந்த அடிப்படையில் கடந்த காலத்தில் எமது பணிகள் சகல மக்களையும் பிரதேசங்களை
மையமாகக் கொண்டுதான் எமது செயற்பாடுகள் நடைபெற்றன. அதற்கான ஆதாரங்களை இப்போது
மக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, நான் மீண்டும் தெரிவு செய்யப்படுகின்ற போது தமிழ் மக்கள் வாழ்கின்ற அனைத்து கிராமங்களுக்கும்
எங்களுடைய உண்மையான நேர்மையான பணிகளை மேற்கொள்வேன் என்பதை தெரிவித்துக்
கொள்கின்றேன்.

தேர்தல் முடிந்த பின்னர் ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களின்
பிரச்சினைகள் தொடர்பில், இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாகவும், இன்னும் பல
முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாகவும், பேச வேண்டிய அவசியம் தமிழரசு கட்சிக்கு
நிச்சயமாக இருக்கின்றது.

உண்மையில் பேசித்தான் ஆகவேண்டும். பேசுகின்றபோது
அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளப்போகின்றார்கள் என்பது தான் எங்களுடைய
எதிர்பார்ப்பு இருக்கின்றது.

நீண்டகாலமாக 75 ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப்
போயிருக்கின்ற இன பிரச்சினைக்கான தீர்வை நாங்கள் பெறுவதற்காக அனைத்து
கைங்கரியங்களையும் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்வோம்” என தெரிவித்தார்.  

NO COMMENTS

Exit mobile version