உக்ரைன் (Ukraine) மற்றும் இஸ்ரேல் (Israel) போர் நிலவரம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் நிலையில், அமெரிக்க (United States) ஜனாதிபதி ஜோ பைடனுடன் (Joe Biden) அவசர சந்திப்பு ஒன்றை முன்னெடுக்க பிரித்தானிய (United Kingdom) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் 6ம் திகதி ரஷ்யாவுக்குள் அதிரடியாக ஊடுருவிய உக்ரைன் படைகள், மிக முக்கியமான இரு பாலங்களை தகர்த்ததுடன் தற்போது பல கிராமங்களையும் கைப்பற்றி முன்னேறி வருகின்றது.
ஆதரவு நாடு
இரு பாலங்களையும் சேதப்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் ஸ்டார்மர், அவசர சந்திப்புக்கு காரணம் இதுவென்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ரஷ்யா (Russia) எதிர்கொள்ளும் மிக மோசமான பின்னடைவு இதுவென்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொலைதூர ஏவுகணைகளை போரில் பயன்படுத்த அனுமதிக்குமாறு உக்ரைன் தமது ஆதரவு நாடுகளிடம் கோரிக்கை வைத்து வருகிறது.
அத்துடன், அமெரிக்கா இந்த விவகாரத்தில் உடனடியாக உரிய முடிவெடுக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஜோ பைடனை சந்திக்கும் முடிவு குறித்து பேசியுள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், உக்ரைன் விவகாரம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அதே நிலை இஸ்ரேல் விவகாரத்திலும் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் சிலவற்றை ரத்து செய்துள்ள விவகாரத்தில் அமெரிக்கா அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவலை ஸ்டார்மர் நிராகரித்துள்ளார்.
Source: https://ibctamil.com/article/starmer-biden-set-for-surprise-war-talks-1725911924
