Home இலங்கை அரசியல் பிமல் ரத்நாயக்கவுக்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்

பிமல் ரத்நாயக்கவுக்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்

0

”மதுபானமும் பணமும் கொடுத்து தமிழரசுக் கட்சி வாக்கு சேகரித்தது என்பதை அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும்” என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் என்று இதுவரை காலமும் பிழையான எண்ணத்தை பிமல் ரத்நாயக்க கொண்டுள்ளார் என்றும் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(08) கடும் ஆவேசத்துடன் பேசிய பிமல் ரத்நாயக்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சி மதுபானமும் பணமும் வழங்கி தேர்தலில் அதிகளவு வாக்குகளை பெற்றதாக குறிப்பிட்டார்.

குற்றச்சாட்டு

இதுதொடர்பில் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,”அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு தெரியவில்லை இலங்கை தமிழரசுக் கட்சி சாத்வீகக் கட்சி மாத்திரமில்லை சமூக அக்கறையுள்ள கட்சியுமாகும்.

75 ஆண்டுகளுக்கு மேலான தமிழரசுக் கட்சியின் வரலாற்றை அமைச்சர் பிமல் ரத்நாயக்க எடுத்துப் பார்க்க வேண்டும்.

மது ஒழிப்புக்காக இயக்கைக் கொண்டுள்ளதுடன் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.

அதனால்தான் மதுபான சாலைகளை புதிதாக அமைப்பதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதுடன் நீதிமன்றங்கள் ஊடாக அவற்றை தடுக்க நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவான மூன்றாம் நாள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார், முன்னைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரசியல் சலுகையாக வழங்கியிருந்த மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கான சிபாரிசினை வழங்கியிருந்த அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடுவோம் என, ஆனால் இன்னும் அதனை வெளியிடவில்லை.

தவறான எண்ணம்

யார் மீதான பயத்தினால் 6 மாதங்கள் கடந்தும் அதனை அவர் வெளியிடவில்லை. எனவே தேசிய மக்கள் சக்தி மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள வெறுப்பினை சகிக்க முடியாமல் அவர்களது உணர்வுகளை அவமதித்து பிழையான சாட்டுதல்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ள கருத்து அவரது அரசின் சிறுமையை வெளிப்படுத்துகிறது.

எனவே தமிழரசுக் கட்சி மீதான இந்தக் குற்றச்சாட்டை நாடாளுமன்றுக்கு வெளியில் ஆதாரங்களுடன் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளிப்படுத்த வேண்டும்.

அத்தோடு சலுகைகளுக்காகவும் கைமாறுக்காகவும் விலை போனவர்கள் தமிழர்கள் என்று இதுநாள் வரை அவர் கொண்டுள்ள எண்ணம் மிகத் தவறானது.”என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version