Home இலங்கை சமூகம் ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 21ஆம் ஆண்டு நினைவு தினம்

ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 21ஆம் ஆண்டு நினைவு தினம்

0

உண்மையையும் பக்கம் சாரா தன்மையையும் தம்மிரு கண்களென  உறுதியெனப்பூண்ட பாரம்பரியமான ஊடகக்கோட்பாட்டுவாயிலாக ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகமொன்றை வேண்டி தனது எழுத்துக்களோடு பயணித்த ஈழத்தின் முன்வைத்து என்னப்பட்ட  ஊடகப்போராளி ஐ. நடேசன் அவர்களின் 21 வது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

தமிழ்த்தேசிய அரசியிலையும் அதன் போக்கின்மீதான கரிசணைகளையும் நெஞ்சுரத்தோடு நேசித்த  ஊடகர் ஐயாத்துரை நடேசனின் கூறிய பேனாமுனை எழுத்துக்கள் யாரையெல்லாம் சுட்டியதோ அவர்கள் எல்லோரும் சேர்ந்து  அந்த எழுத்துக்களுக்கு அச்சங்கொண்டு கௌரி நடேசன் என்ற ஜீ நடேசனின் எழுத்துக்களுக்கு  இன்றைக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பதாக மட்டக்களப்பின் எல்லை வீதியில் வைத்து   துப்பாக்கி வேட்டுகளால் மரணமென்னும் எல்லையை உருவாக்கி நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களை படுகொலை செய்தனர்.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்த நடேசன் தமது தனித்துவம் நிறைந்த எழுத்துக்களால் இலங்கையின் ஊடகப் பரப்பில் பெரிதும். அறியப்பட்ட ஒரு ஊடகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் .

தமிழ் தேசியம்

எழுத்துக்கள் எப்போதுமே வீரியம் கொண்டு சமூக மாற்றத்திற்கான அத்திவாரங்களை அதிகம் உருவாக்குபவை அப்படித்தான் நடேசனின் எழுத்துக்களும் கூட எல்லோருள்ளும் ஏதோ ஒரு மாற்றத்தை உண்டுபண்ணியது என்பது யாராலும் இலகுவில் மறுதலித்து விடாத ஒரு உண்மையாகும் .

அன்றைய காலங்களில் இலங்கையின் பிரபல நாளிதலொன்றின் ஞாயிறு வெளியீட்டுக்காக வடகிழக்கிலும் அதற்கு அப்பாலும் தமிழ் தேசியத்தையும் அதன் அரசியல் போக்கினையும் நேசிக்கும் கண்கள் காத்துக்கிடக்கும் ஏன் என்றால் அந்த வார இறுதி இதழில் பூத்திருக்கும் நடேசனின் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளுக்கு என்று சொல்லுவதே சாலப்பொருந்தும்.

நடேசனின் கட்டுரைகளுக்காகவே அந்த இதழ் அப்போதைய காலகட்டங்களில் விற்பனையாகிறது என்ற கருத்துக்கள் அதிகமாக உலாவித் திரிந்த காலமொன்றில்தான் காலம் அழிவு என்னும் முடிவு கோட்டை நடேசனுக்கும் வரைந்தது.

நீதி தேவதை

ஒவ்வொருவருடைய இறப்புக்கும் பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் நடேசன் என்ற நெல்லை நடேசனின் மரணத்திற்கு அவரது பக்கம் சாராத உண்மையின் தெளிவு கொண்ட எழுத்துக்களும் தமிழ் தேசத்தின் மீதான மாறாத நிலைப்பாடுகளுமே காரணமாக அமைந்தது.

அன்றைய காலங்களில்  ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழுக்களாக பல படுகொலைகளையும் கடத்தல்களையும் அரங்கேற்றிய அவர்களே இந்த ஊடகப்படுகொலையும் புரிந்தனர் என்பது ஆதாரங்களோடு நிரூபணமான பின்பும் கூட நீதிதேவதை  பேசா மடந்தையாக  வாய் மூடி மௌனித்திருக்கிறாள் இன்றுவரை.

மிகவும்  பெறுமதி மிக்க அரசியல் கட்டுரைகளை எழுதி, அதன்மூலம் ஊடக பரப்பில் முன்வைத்து எண்ணப்பட்ட நடேசன் இலங்கை தமிழ் பத்திரிகையாளர் ஒன்றியத்தின் துணை தலைவராக படுகொலை செய்யப்படும் வரை பணியாற்றியிருந்தார் . அரச அதிகாரியாக பதவி வகித்த காரணத்தினால் ஆரம்ப காலங்களில் நெல்லை நடேசன் என அறியப்பட்ட இவர் பின்னான காலங்களில் தனது மனைவியின் பெயரமைந்த கௌரி நடேசன் , ஜீ  நடேசன் என்ற பெயர்களில் அதிகம் அறியப்பட்டார் .

நெஞ்சுரத்தோடு தனது நேரிய ஊடகப் பணியை சீராக மேற்கொண்ட நடேசன் கொல்லப்படும் வரை இலங்கையின் பிரபல செய்தி ஊடகங்களின் மட்டக்களப்பு பிராந்திய செய்தியாளராகவும் அரசியல் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றியதோடு எமது ஐபிசி தமிழ் வானொலியின் இலங்கைக்கான செய்தியாளராகவும் எம்மோடு மிக நெருங்கிப் பயணித்து அன்றைய காலங்களில் தமிழ் தேசியம் சார்ந்த நிலைப்பாட்டையும் கள நிலவரங்களையும் சர்வதேச ரீதியில் எடுத்துச்சென்ற  எமது ஊடக குழுமத்தின் உண்மைக்கான ஊடகப்பணியில் மிக முக்கியமான பங்களிப்பை நல்கிய ஒரு ஊடகராக நாட்டுப்பற்றாளர் நடேசனை நாம் நினைவுகூருவது சாலப்பொருந்தும்.

எந்த சந்தர்ப்பத்திலும் தனது எழுத்துக்கள் யாருக்கும் பணிந்து விடக்கூடாது என்பதிலும் தனது பயணம் தடம் மாறிவிடவோ மாற்றப்படவோ கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த நடேசன் தான் வாழ்ந்த மட்டக்களப்பு மண்ணையும் மக்களையும் மிகுதியாக நேசித்தவர். 

21வது ஆண்டு நினைவு தினம்

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 21வது ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் யாழில் அமைந்துள்ள ஐபிசி தமிழ் கலையகத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையில் நீண்டு தொடரும் ஊடகவியலாளர்களுக்கெதிரான. வன்முறைகளையும் ஆட்கடுத்தல் படுகொலைகளும் என்று தீரும் என்பது
விடை காண முடியாத ஒரு விடுகதையே.

இன்றைய நாளில் ஒரு செய்தியாளராக கடினமான காலங்களிலும் கூட காத்திரமான உடகப்பணியாற்றிய எமது ஊடக நண்பர். ஐயாத்துரை நடேசன் அவர்களை கனதியான வலிகளோடு நினைவேந்துவதோடு அன்னாரின் படுகொலைக்கான நீதி விசாரணைகளையும் வேண்டி நிற்போம்.

உண்மையின் சாட்சியான ஊடகப்பணியில் உயிர் பறிக்கப்பட்ட அத்தனை ஊடகப்போராளிகளின் ஆண்ம ஈடேற்றத்திற்காகவும் பிரார்த்திப்போம்.

NO COMMENTS

Exit mobile version