உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடம் தமிழ் ராஜபக்சக்களை கண்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ராஜபக்ச
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், “வடக்கு மாகாண மக்களின் ஆதரவு எமக்கு உள்ளது. இது ஆரம்பத்தின் முதல் வெற்றியாகும். வடக்கில் பலமான அரசியலுக்கான அத்திவாரமிட்டுள்ளோம்.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் செயற்படுவோம்.
சுய விருப்பத்தின் அடிப்படையில் வெகுவிரைவில் அமைச்சின் விடயதானங்கள் மறுசீரமைக்கப்படும். புதிய தரப்பினர்கள் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போது பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடம் தமிழ் ராஜபக்சக்களை கண்டோம். தமிழ் ராஜபக்சக்கள் தோற்றம் பெறுவார்கள் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை.” என தெரிவித்தார்.
