Home முக்கியச் செய்திகள் தமிழர் தலைநகரில் மாயமான யுவதி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

தமிழர் தலைநகரில் மாயமான யுவதி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

0

புதிய இணைப்பு

காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட பெண்ணின் சடலமும் அவரது கைப்பையும் திருகோணமலை, மூதூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து காவல்துறையினரால் இன்று (05) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் போது, டேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூதூர் காவல்நிலையத்தில் காணாமல்போனதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரித்த காவல்துறையினர் சந்தேகத்துக்கிடமான கிணற்றை மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம் தஸ்னீம் பௌசான், திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் முன்னிலையில் இன்று (05) தோண்டியபோதே குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பின்னர், அந்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

முதலாம் இணைப்பு 

திருகோணமலை (Trincomalee) – சேருவில காவல்துறை பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் சேருவில மற்றும் மூதூர் காவல்நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையை ஆரம்பித்துள்ள மூதூர் (Mutur) காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை விசாரணை செய்ததன் அடிப்படையில், கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப்புறத்தில் பாழடைந்து கிடக்கும் கிணறு ஒன்றை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளனர்.

காணொளி அழைப்பு

இந்நிலையில், அப்பகுதியில் நேற்று (03) புதன்கிழமை முதல் காவல்துறை உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அந்த கிணறு நாளைய தினம் (5) வெள்ளிக்கிழமை காலை மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளதாக மூதூர் காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.

தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த இந்த யுவதியும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அயல் கிராமமான கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனும் காதலித்து வந்தமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த மே மாதம் யுவதி காதலனுடன் மட்டக்களப்புக்கு சென்று வசித்து வந்ததாகவும், மே மாதம் (31)ஆம் திகதி மாலை அழுது கதைத்த குரல் பதிவொன்றையும் குடும்பத்தாருக்கு அனுப்பியுள்ளார்.

அதனை தொடர்ந்து, அன்றைய தினம் இரவு காணொளி அழைப்பில் குடும்பத்தாருடன் கதைத்திருந்ததாகவும், இதன்போது வீட்டுக்கு வருவதாக தெரிவித்திருந்ததாகவும் அதன் பின்னர் அவருடன் தொடர்பில்லாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

இதனையடுத்து, காதலனின் தொலைபேசி இலக்கத்துக்கு யுவதியின் குடும்பத்தார் பல முறை முயற்சித்தபோதும், ஜூன் மாதம் (13)ஆம் திகதி அவர் அழைப்பெடுத்து, தான் வேலையில் நிற்பதாகவும் வீட்டுக்குச் சென்று அக்காவுடன் கதைக்கக் கொடுப்பதாகவும் யுவதியின் தம்பியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில், சேருவில மற்றும் மூதூர் காவல்நிலையங்களில் யுவதியின் குடும்பத்தினர் ஜூலை மாதம் முதலாம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கொலை செய்து கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என்றும் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் அருகில் இருந்த குப்பைகளைக் கொண்டு காதலனால் கிணறு மூடப்பட்டிருக்கலாம் எனவும ்காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version