புதிய இணைப்பு
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு (Asoka Ranwala) எதிராக இன்று (13) ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
சபாநாயகர் தான் கலாநிதி பட்டம் பெற்றதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய காரணத்தாலேயே இந்த நம்பிக்கையில்லா பிரேணை கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, அதன் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே. சி அலவத்துவல, அஜித் பி பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா, சதுர கலப்பத்தி, ஜகத் விதான மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகுதி தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்படானது, புதிய மக்கள் முன்னணியின் மஹரகம அமைப்பாளர் தினேஷ் அபேகோனால் இன்று (12) அளிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தில் மக்கள்
இதன்போது, பத்தாவது நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகர் தேர்தலுக்கு முன்னரும் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதும் முன்வைத்த கல்வித் தகைமையின் சரியான தன்மை தொடர்பில் பொது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுவதாக புதிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியே வந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக அசோக சபுமல் ரன்வல நவம்பர் 21ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டார்.
பகிரங்க அறிக்கை
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் அசோக ரன்வல சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சபாநாயகருக்கு கலாநிதி பட்டம் இல்லை என பல்வேறு கருத்துகள் எழுந்ததுடன், சமூக வலைதளங்களிலும் இது தீவிர விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
அத்தோடு, தேசிய மக்கள் சக்தியின் சார்பாக ஆதரித்தவர்கள் கூட அவர் உண்மையிலேயே அப்படிப்பட்ட பட்டம் பெற்றவரா இல்லையா என்பது குறித்து பகிரங்கமாக அறிக்கை வெளியிட வேண்டும் என சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்ததுடன் விரைவில் அவ்வாறானதொரு விடயத்தை சபாநாயகர் விரைவில் என மேற்கொள்வார் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
