பழைய எரிபொருள் முச்சக்கரவண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளின் மேற்கூரையில் சூரிய சக்தி தகடுகளை பொருத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முச்சக்கரவண்டிகளை மாற்றுவது
அவர் மேலும் தெரிவிக்கையில், பெட்ரோலில் இயங்கும் பழைய முச்சக்கரவண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவது மிகப்பெரிய நன்மையாகும். அந்த வண்டிகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பதுடன், பெற்றோலுக்கான செலவும் இல்லை.
இந்த முறையில் ஒரு கிலோமீற்றருக்குச் சுமார் 5 ரூபாய் மட்டுமே செலவாகும். ஒருமுறை மின்னேற்றினால் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். வாகனத்தை மின்சார முறைக்கு மாற்றுவதற்கு சுமார் 8 லட்சம் ரூபாய் செலவாகும்.
சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கரவண்டி
தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால் ஏற்கனவே புதிய மின்சார முச்சக்கரவண்டி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. தனியார் துறையுடன் இணைந்து இதனை மேலும் மேம்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
எதிர்காலத்தில் முச்சக்கரவண்டிகளின் மேற்கூரையில் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தி, அதன் மூலமே வண்டியை இயக்குவதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான ஆராய்ச்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் வெற்றி நாட்டுக்கு ஒரு பெறுமதிமிக்க முதலீடாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
