Home இலங்கை சமூகம் திருகோணமலை உலக மீட்பர் திருச்சபை மண்டபத்திற்குள் நுழைய தடை : வீதியில் மக்கள் ஆராதனை

திருகோணமலை உலக மீட்பர் திருச்சபை மண்டபத்திற்குள் நுழைய தடை : வீதியில் மக்கள் ஆராதனை

0

Courtesy: H A Roshan

திருகோணமலை (Trincomalee) 6ஆம் கட்டை சாம்பல்தீவு பகுதியில் உள்ள உலக மீட்பர் திருச்சபையில் ஆராதனையை முன்னெடுக்க கூடாது என திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று (25) ஆராதனையில் ஈடுபட வந்த மக்கள் குறித்த தேவாலயத்திற்கு முன் வீதியில் ஆராதனையில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த காணி தனியார் ஒருவருக்கு சொந்தமானது என நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் எதிர்வரும் இரு வாரங்களுக்கு திருச்சபை மண்டபத்திற்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. 

மத கடமைகள்  

அத்துடன், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த கிறிஸ்தவ தேவாலயத்தின் பிரதான போதகர் சிவா இமானுவேல் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், ”அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் கட்டிடம் அமைத்து பல வருடங்களாக சுமார் 100 அங்கத்தவர்களுடன் வழிபாட்டில் ஈடுபடுகிறோம்.  இன்று எமது மத சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சுதந்திரமாக மத வழிபாடுகளில் ஈடுபடவும், எமது ஆராதனைகளை மேற்கொள்ளவும் உடனடியாக வழிவகை செய்து தாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை, ஆராதனையில் ஈடுபட வந்த மக்கள் வீதி அருகில் மதக்கடமைகளை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version