Home இலங்கை சமூகம் மக்கள் காணிகளை விடுவிக்க கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மக்கள் காணிகளை விடுவிக்க கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

0

Courtesy: H A Roshan

திருகோணமலை (Trincomalee) – பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்வேரி கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளனர்.

இந்த முறைப்பாடு நேற்றைய தினம் (30) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் வசித்து வந்த 31 குடும்பத்தினர்களது, விடுவிக்கப்படாத நிலையில் உள்ள 42 ஏக்கர் குடியிருப்புக் காணிகளில் 35 ஏக்கர் பகுதியானது பெரும்பான்மையினத்தினை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு அரசினால் குத்தகை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பாகவே இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்வு 

உள்நாட்டு யுத்தம் காரணமாக குறித்த கிராமத்தவர்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில் அவர்கள் மீளக் குடியேற முட்பட்டபோது அவர்களது காணிப்பகுதிகளை அரசானது கையகப்படுத்தியது. 

அத்தோடு யுத்தம் முடிந்து பல வருடங்கள் ஆகியுள்ள நிலையில் குறித்த காணிகளில் இன்றுவரை மீளக்குடியேற முடியாதிருப்பதன் காரணமாக அது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு வந்திருந்தனர்.

1983ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் போது தாம் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்ந்ததன் பின்னர் 90களிலும் இடம்பெயர நேரிட்டதாகவும் அதன் பின்னராக அவர்களது வீடுகள் இருந்த பகுதிகளில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்ததால் அப்போது மீளவும் குடியேற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தனிநபருக்கு கையளிப்பு 

அதன் பின்னராக வனஜீவராசிகள் திணைக்களம் குறித்த பகுதியில் எல்லையிட்டதன் பின்னராக தற்போது அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்ததுடன் அவ்வாறு எல்லையிடப்பட்ட பகுதிகளை அரச இயந்திரங்கள் மூலமாக பெரும்பான்மையினத்தினை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அது தொடர்பில் பலதரப்பட்ட மட்டங்களில் முறையிடப்பட்டிந்த போதிலும் தகுந்த பதில் கிடைக்கப்பெறாத நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாகவும் அம்மக்கள் கூறியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version