திருகோணமலையில் (Trincomalee) உள்ள பாடசாலை ஒன்றில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (15.05.2025) திருகோணமலை – புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “திருமலை – புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது ஒரு மாணவர் இன்னுமொரு மாணவர் மீது கூரிய ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மாணவரின் கழுத்துப் பகுதியில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் புல்மோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காதல் பிரச்சனை காரணமாகவே இருவருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
