அநுராதபுரம் மல்வத்து ஓயாவில் தனது தாயுடன் குதித்த இரு பிள்ளைகளுள் நான்கரை வயதுடைய மகளின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மல்வத்து ஓயாவில் நீருக்கு அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன இரண்டு பிள்ளைகளில் ஒருவரான சிறுமியின் சடலம் அனுராதபுரத்தில் உள்ள ‘மல்வத்து ஓயா லேன்’ வீதிக்கு செல்லும் புதிய பாலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ, அங்குலான பகுதியைச் சேர்ந்த சித்துல்யா மீரியகல்லே என்ற சிறுமியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
விபரீத முடிவு
சிறுமியின் ஒரே சகோதரனான திஷுக மீரியகல்லே எனப்படும் 8 வயது சிறுவனின் சடலம், கடந்த 4 ஆம் திகதி அனுராதபுரத்தில் உள்ள மிஹிந்துபுர பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவரது இடது கை மற்றும் இடது கால் காணாமல் போயிருந்ததாகவும், அது முதலைகளால் உண்ணப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஏழு நாட்களுக்கு முன்பு, அதாவது கடந்த 2 ஆம் திகதி, மொரட்டுவ அங்குலான பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார், தனது எட்டு வயது மகன் மற்றும் நான்கரை வயது மகளுடன் அனுராதபுரத்திற்கு வந்து, அனுராதபுரம் பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள மிஹிந்துபுர பாலத்திலிருந்து மல்வத்து ஓயாவில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், தாயார் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
