Home இலங்கை அரசியல் வியாழேந்திரனுக்கு எதிரான கருத்துக்கள்! பொலிஸில் முறைப்பாடு

வியாழேந்திரனுக்கு எதிரான கருத்துக்கள்! பொலிஸில் முறைப்பாடு

0

எனது வீட்டுக்கு முன்பாக நடைபெற்ற கொலை தொடர்பில் அனைத்து விசாரணைகளும்
முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்
ஊடகங்களில்  கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்
சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டகளப்பு பொலிஸ் நிலையத்தில் தனது முறைப்பாட்டினை அவர் பதிவு செய்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான மற்றும் முற்றுமுழுதான பொய்யான
கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எனது வீட்டுக்கு முன்பாக நடைபெற்ற கொலை தொடர்பில் முழுமையான விசாரணைகள்
நடைபெற்றுள்ளன, எனது அனைத்து தகவல்களும் பெறப்பட்டன. எனது கையடக்க தொலைபேசி மற்றும்
மெய்க்காலவலர் என அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

சம்பவம்
நடைபெற்றபோது நான் இருந்த இடம் தொடர்பிலான அனைத்து தகவல்களும் பொலிஸாரிடம்
வழங்கப்பட்டன. ஆனால் இவையெல்லாம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்கு
அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டமை தொடர்பில்
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளேன்.

அதேபோன்று கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் என்பவர் முகப்புத்தகம் ஊடாக நேரலைசெய்து
எனது பெயருக்கும் எனது முற்போக்கு கழகத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும்
வகையிலான கருத்துகளை முன்வைத்துவருகின்றார்.

முன்பு ஒரு தடவை அவருக்கு எதிராக
இவ்வாறு கருத்துகளை தெரிவித்து அவருக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்தபோது
தான் இனி அவ்வாறு செயற்படமாட்டேன் என எங்களிடம் வந்து தெரிவித்ததையடுத்து அந்த
வழக்கினை திரும்பப் பெற்றேன்.

ஆனால் அவர் மீண்டும் எனது பெயருக்கும் முற்போக்கு தமிழர் கழகத்திற்கும்
களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் தகாத வார்த்தைகள் மூலமாகவும்
முகப்புத்தகத்தில் நேரலைசெய்துள்ளார். அவருக்கு எதிராகவும் முறைப்பாட்டினை
இன்று பொலிஸ் தலைமையகத்தில் செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version