Home இலங்கை அரசியல் இலங்கையின் புதிய பிரதமர் : யார் இந்த ஹரிணி அமரசூரிய..!

இலங்கையின் புதிய பிரதமர் : யார் இந்த ஹரிணி அமரசூரிய..!

0

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க(anura kumara dissanayake) தலைமையிலான அரசாங்கத்தில் இன்றையதினம்(24) பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய(harini amarasuriya) 1970 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 06 ஆம் திகதி பிறந்தார்.

பௌத்த மதத்தை பின்பற்றும் இவர் திருமணமாகாதவர்.

அவர் இலங்கையின் மூன்றாவது பிரதமராக வரலாறு படைத்தார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இதற்கு முன்னர் பதவி வகித்தனர்.

2020 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அவர் தேசிய மக்கள் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியலில் நுழைவதற்கு முன்னர்

அவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

கொழும்பு பிஷப் கல்லூரியில் அடிப்படைக் கல்வி பயின்ற கலாநிதி அமரசூரிய, பின்னர் உயர் கல்விக்காக வெளிநாடு சென்றார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் தனது முதல் பட்டப்படிப்பைப் பெற்றார்.

சிட்னியில் உள்ள மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் அப்ளைடு ஆந்த்ரோபாலஜி மற்றும் டெவலப்மென்ட் கற்றலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

2011 இல், எடின்பேர்க் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக்கழகங்களில் சமூக மானுடவியல், சர்வதேச சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்

ஹரிணி அமரசூரிய 2020 முதல் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூகக் கற்கைகளுக்கான மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார்.

கருத்தியல் ரீதியாக மைய-இடதுசாரியாகவும், தாராளவாதியாகவும் விளங்குகிறார். இவர் இளைஞர்களின் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, சிறுவர் பாதுகாப்பு, இலங்கை கல்வி முறையின் திறமையின்மை ஆகியவை பற்றிய தனது ஆய்வுகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.

தேர்வை மையமாகக் கொண்ட கல்வி முறையை நாம் அகற்ற வேண்டும். கல்வி மிகவும் அனுபவபூர்வமாக இருக்க வேண்டும். நமது கல்வி நிறுவனங்களின் கலாச்சாரம் மாற வேண்டும். பாலினம், மதம் அல்லது மொழி அடிப்படையில் பிரிந்த நிறுவனங்கள் நம்மிடம் இருக்க வேண்டாம். மாறாக அங்கெல்லாம் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் கல்விப் பாதைகள் மற்றும் தொழிலைத் தீர்மானிப்பதில் அதிக தேர்வு மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். கல்விக்கு அரசு முதன்மையாக பொறுப்பேற்க வேண்டும் என்பது போன்ற முற்போக்குச் சிந்தனைகளுக்கு இவர் சொந்தக்காரராவார்.

இளைஞர் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, குழந்தை பாதுகாப்பு மற்றும் இலங்கை கல்வி முறையில் திறமையின்மை போன்ற அழுத்தமான பிரச்சனைகளில் ஹரிணி நன்கு அறியப்படுகிறார்.

இலவசக் கல்விக்காக ஆர்ப்பாட்டம்

தற்போது இலங்கை உள்ளூர் இலாப நோக்கற்ற அமைப்பான நெசுட்டு என்ற அமைப்பின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக வேலை செய்கிறார்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பின் உறுப்பினராக இணைந்த பின்னர் 2011 ஆம் ஆண்டில் இலவசக் கல்விக்காக ஆர்ப்பாட்டங்களில் இணைந்த பிறகு தனது செயல்பாட்டைத் தொடர்ந்தார்.

குழந்தை பாதுகாப்பு மற்றும் உளவியல் சமூக பயிற்சியாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, இலங்கை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் மூத்த விரிவுரையாளராக சேர்ந்தார்.

அறிவுஜீவிகள் அமைப்பில் சேர்ந்தார்

ஹரிணி 2019 ஆம் ஆண்டு தேசிய அறிவுஜீவிகள் அமைப்பில் சேர்ந்தார். 2019 இலங்கை ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்காக பிரசாரம் செய்தார்.

12ஓகஸ்ட் 2020 அன்று, இவர் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையின் 16 வது நாடாளுமன்றத்தில் நுழைய தேசிய பட்டியல் வேட்பாளராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்  

https://www.youtube.com/embed/M5E1DdCAaRs

NO COMMENTS

Exit mobile version