முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க (arjuna ranatunga)மற்றும் அவரது சகோதரர் தம்மிக்க ரணதுங்க மீது சுமத்தப்பட்டுள்ள 800 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை விரைவுபடுத்துமாறு சிவில் புலனாய்வு முன்னணி, இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை முன்வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய மஹாவத்த, அர்ஜுன ரணதுங்க கனிம வள மேம்பாட்டு அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் இந்த நிதி முறைகேடு நடந்ததாகக் கூறினார்.
இரு சகோதரர்கள் மீது குற்றச் சாட்டு
அந்த நேரத்தில் தம்மிக்க ரணதுங்க பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகச் செயல்பட்டதாகவும், இந்த இரு சகோதரர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புகார் மீதான விசாரணை தற்போது தேக்கமடைந்துள்ளதாகவும், விசாரணை இவ்வாறு தேக்கமடைந்திருப்பது சந்தேகத்திற்குரியதாக கருதப்பட வேண்டும் என்றும் மஹாவத்த மேலும் வலியுறுத்தினார்.
