இலங்கை பொலிஸ், மிகவும் கீழ்த்தரமான முறையில் செயற்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணை குறித்து பொலிஸாருக்கு வழங்கிய
வாக்குமூலத்தின் விடயங்களை ஊடகங்களுக்குப் பொலிஸ் திணைக்களம்
பகிரங்கப்படுத்தியுள்ளமை இதுவே முதன்முறையாகும்.
சந்தேகம்
தண்டனைச் சட்டக்கோவையின் 110 (3) பிரகாரம் ஏதேனும் வாக்குமூலம் குறித்து
பொலிஸாருக்கு வழங்கும் வாக்குமூலத்தின் இரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்.
இலங்கையில் உள்ளது இலங்கை பொலிஸா அல்லது ஜே.வி.பியின் பொலிஸா என்ற சந்தேகம்
தோற்றம் பெற்றுள்ளது. இலங்கை பொலிஸ் கடந்த காலங்களில் இவ்வாறு
செயற்பட்டதில்லை.
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பொலிஸ் சேவையைப் பொலிஸ்மா
அதிபர் அரசியல் மயப்படுத்தியுள்ளார்.
அரசின் அடக்குமுறைகள்
போதைப்பொருள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் தங்காலை பொலிஸார் என்னை
அழைத்து வாக்குமூலம் பெற வேண்டிய அவசியமில்லை.
அந்த நபருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பையே வெளிப்படுத்தினேன்.
ஊடகங்களுக்கு அதனையே வெளியிட்டேன்.
இலங்கை பொலிஸ் மிகவும் கீழ்த்தரமான முறையில் செயற்படுகின்றது.
எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகளின் பிரதானியாகவே பொலிஸ்மா
அதிபர் செயற்படுகின்றார். அரசின் முறைகேடான செயற்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்துவேன். பொலிஸாரைக் கொண்டு எம்மை அச்சுறுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
