குருணாகல – ஹெட்டிபொல காவல்துறை பிரிவிக்குட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவம் நேற்றைய தினம் (20.08.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கொலை செய்யப்பட்ட குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ள நிலையில், அவரது மகன் தினமும் தொலைபேசியில் தாயுடன் உரையாடி நலம் விசாரித்து வந்துள்ளார்.
காவல்துறை விசாரணை
இந்நிலையில் கடந்த 19ஆம் திகதி முதல் தாயிடமிருந்து எந்தவொரு தொலைபேசி அழைப்பும் வராததால் சந்தேகமடைந்த மகன் நேற்று அதிகாலை தாய் வசித்து வந்த வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார்.
இதன்போது தாயின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், எதற்காக இக் கொலை நடந்துள்ளது என்பது இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனகாவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
68 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹெட்டிபொல காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
