உலக வங்கியின் தூதுக்குழுவினருக்கும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (28) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, அறிவியல் நகர் – உப நகர அபிவிருத்தித் திட்டம், பரந்தன்
கைத்தொழில் ஊக்குவிப்பு வலைய அபிவிருத்தி, கிளிநொச்சி நீர் வழங்கல் திட்ட
மேம்பாடு, கௌதாரி முனை சுற்றுலா மையத்துக்கான வீதி அபிவிருத்தி ஆகிய
விடயங்களில் உலக வங்கியின் முதலீட்டைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அபிவிருத்தி தேவைப்பாடுகள்
இந்தக் கலந்துரையாடலில் துறைசார்ந்து காணப்படும் அபிவிருத்தி தேவைப்பாடுகள்,
தடைகள், அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியப்பாடுகள் தொடர்பில்
மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளிடம்
கேட்டறிந்து கொண்டனர்.
மேலும் உலக வங்கி வடக்கு கிழக்கு மாகாணங்களில் “அபிவிருத்திக்கான கொத்தணி”
அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இவை உள்ளடக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடலில்உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி,
செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங், உலக வங்கியின் அதிகாரிகள், மாவட்ட சமுர்த்திப்
பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளர், வட மாகாண முதலீட்டுச் சபையின்
மாகாண பணிப்பாளர், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கிளிநொச்சி
மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின்
பொறியியலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
