‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு நேற்று பெருந்திரளான மக்களின் ஆதரவுடன் கனடா ALBERT CAMPBELL SQUARE இல் நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் நினைவாகவும், நீதிக்காகக் காத்திருக்கும் குடும்பங்களின் குரலாகவும் ஒன்றிணைந்து நடாத்தப்பட்ட செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் என்புக் கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் நீதி கேட்டு ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ – ‘விழித்தெழு தமிழா!’ மிகுந்த காத்திரமாக நடைபெற்றது.
எம்மினத்துக்காகக் குரல்கொடுப்பதற்கு கனேடிய மண் மேடை கொடுத்தமைக்கு நன்றி கூறியபடி ஆரம்பமாகிய நிகழ்வில்
செம்மணி என்பது வெறும் மண்ணல்ல… பல குடும்பங்களின் வலியான வரலாறு!
காணாமற் போன எம் உறவுகள் குறித்த உண்மைகள் வெளிவரவேண்டும் என்ற எம்மினத்தின் ஆறாத வலிகள், தேடல்கள், காத்திருப்புக்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மௌனித்த வார்த்தைகள்… என எல்லாவற்றுக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாகப் பதிலைப் பெற்றுத் தரவே இன்று நாங்கள் கூடியுள்ளோம் என்ற செய்தி மற்றும் ‘அன்னைத் தமிழீழ மண்ணே” என்ற தாயகப்பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
ரொறண்டோ மேயர் பதவி வேட்பாளரும் நீண்ட கால கனேடிய அரசியல் பிரமுகருமான பிராட் பிராட்பேர்ட் தனது உரையில் கனடிய தமிழர்களால் தமது இனத்துக்கு நீதி கேட்டு நடாத்தப்படும் மேற்படி போராட்டத்திற்கு பக்க பலமாகவும் உறுதுணையாகவும் தானும் தனது கட்சியும் தொடர்ச்சியாக பயணிப்போம் என்றும். சர்வதேச நீதியைப் பெறுவதில் தமது பங்கும் பெரிதாக இருக்கும் என தெரிவித்தார்.
