ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவர், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (UAE) நேற்று (13) இரவு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான “மோதர நிபுண” என்பவரின் சகோதரரான “மோதர சத்துர” மற்றும் “புளூமெண்டல் சங்கா” ஆகியோர் அடங்குவதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இவர்கள் இருவரும், சட்ட அமலாக்கப் பிரிவினரிடமிருந்து தப்பித்துக் கொண்டு அபுதாபியில் மறைந்து வாழ்ந்து வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையின் மத்தியில், ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகளை தங்களது கைபேசிகளில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், இருவரும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த உடனேயே, விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் சந்தேகநபர்களை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
“மோதர சத்துர” என்பவரிடம் விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மற்றைய சந்தேகநபரான “புளூமெண்டல் சங்கா” விமான நிலைய CID அதிகாரிகளின் காவலில் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவரது வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், நாட்டில் இயங்கி வரும் போதைப்பொருள் வலைப்பின்னல்கள் மற்றும் குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய மேலும் பலரை அடையாளம் காணும் நோக்கில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
