Home இலங்கை இணைய வியாபாரத்தில் அதிக வருமானம் எனக் கூறி இலட்சக்கணக்கில் மோசடி; இளைஞன் கைது

இணைய வியாபாரத்தில் அதிக வருமானம் எனக் கூறி இலட்சக்கணக்கில் மோசடி; இளைஞன் கைது

0
image

இணையம் ஊடாக வியாபாரம் செய்து அதிகளவில் பணம் சம்பாதிக்க முடியும் என நம்பவைத்து, 43 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளில், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் சமூக ஊடகங்கள் வழியாக நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, இணைய வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதன்படி, சந்தேகநபர் மொத்தமாக  நாற்பத்து மூன்று இலட்சத்து எண்பத்தாறாயிரத்து இருநூற்று பத்தொன்பது (4,386,219) ரூபாயை மோசடி செய்துள்ளதாகவும், 

அதில் 5 இலட்சம் ரூபாயை தனிப்பட்ட தேவைகளுக்காக முறையற்ற வகையில் பயன்படுத்தியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/high-income-in-online-business-claimed-fraud-worth-lakhs-young-man-arrested-1783054455

NO COMMENTS

Exit mobile version