Home இலங்கை இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட யாழ். தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட யாழ். தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்

0
image

இரத்த பரிசோதனைக்காக அதிக கட்டணம் அறவிட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிகபட்சக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count – FBC) ஒன்றிற்காகத் தனியார் துறையினரால் அறவிடக்கூடிய அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாவாகும். 

எனினும், யாழ்ப்பாணம், பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றினால் குறித்த பரிசோதனைக்காக 550 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பொன்றின் போது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இதன்போது, பிரதிவாதி நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு 3 மில்லியன் ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் விதித்துள்ளது. 

மேலும், இழைக்கப்பட்ட குற்றம் தொடர்பில் பிரதிவாதி நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே பிரதான பத்திரிகைகளில் அறிவிப்பொன்றைப் பிரசுரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தனியார் மருத்துவமனை அல்லது மருத்துவ ஆய்வுகூடங்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. 

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை விடக் கூடுதலாகப் பணம் அறவிடப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடளிக்க முடியும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Source: https://samugammedia.com/jaffna-imposed-a-high-fee-for-blood-tests-fine-for-private-hospitals-1784780359

NO COMMENTS

Exit mobile version