Home இலங்கை உடப்பில் கடல் சீற்றம், பலத்த காற்று: கடலுக்குச் செல்லாத மீனவர்கள்! 36 மணிநேரம் ஆபத்து

உடப்பில் கடல் சீற்றம், பலத்த காற்று: கடலுக்குச் செல்லாத மீனவர்கள்! 36 மணிநேரம் ஆபத்து

0
image

புத்தளம் மாவட்டத்தின் உடப்பு கரையோரப் பகுதியில் இன்று (29) அதிகாலை முதல் அதிவேக தென்மேல் பருவக்காற்று வீசி வருவதால், அப்பகுதி மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பலத்த காற்றுடன் கடல் அலையும் சீற்றமடைந்து காணப்படுவதால், மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் கரையோரத்திலேயே தங்கியுள்ளனர்.

காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் கரையோரப் பகுதியில் நிற்பதே கடினமான நிலை ஏற்பட்டுள்ளதுடன், மணல் காற்றில் பறந்து சுற்றுப்புறத்தை பாதித்து வருகிறது.

மேலும், கரையோர வீடுகளுக்கு அருகிலுள்ள மரங்கள் பலத்த காற்றின் தாக்கத்தால் முறிந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

இப்பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

அதேபோல், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Source: https://samugammedia.com/strong-winds-and-high-seas-fishermen-do-not-go-to-the-sea-danger-for-36-hours-1782709514

NO COMMENTS

Exit mobile version