Home இலங்கை எரிபொருள் விலை குறைப்பு, தனிநபர் வாழ்க்கை செலவு குறித்து சபையில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை குறைப்பு, தனிநபர் வாழ்க்கை செலவு குறித்து சபையில் வெளியான அறிவிப்பு

0
image

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறையும் சந்தர்ப்பங்களில், அந்த விலைக்குறைப்பின் பலனை நிச்சயமாக நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எரிபொருள் விலை நிவாரணத்தை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

டீசலுக்கு 100 ரூபாவும், பெற்றோலுக்கு 20 ரூபாவும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த எரிபொருள் மானியம் அனைவருக்கும் சமமான முறையில் வழங்கப்படுவதில்லை. 

தற்போது மானியங்களுக்காக அமைச்சரவையினால் 57 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்தத் தொகை இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலைகளில் எப்போது மாற்றம் செய்யப்படும் என்று தற்போதைக்குக் கூற முடியாது. உலகச் சந்தையின் விலை நிலவரங்களுக்கு அமைவாகவே அது தீர்மானிக்கப்படும்.

அத்துடன், கடந்த மார்ச் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்து வந்துள்ளதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஒரு தனிநபர் மாதம் 17,700 ரூபாய் வருமானத்தைக் கொண்டு உயிர்வாழ முடியும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள கணிப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெளிவுபடுத்தினார்.

தற்போதைய வாழ்வாதாரச் செலவுகள் மற்றும் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் இத்தொகை போதுமானதல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

Source: https://samugammedia.com/announcement-in-the-assembly-about-fuel-price-reduction-and-individual-living-expenses-1782380436

NO COMMENTS

Exit mobile version