Home இலங்கை கடல் சீற்றம் அதிகரிப்பு; மறுஅறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்! மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கடல் சீற்றம் அதிகரிப்பு; மறுஅறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்! மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

0
image

காங்கேசன்துறை முதல் கல்பிட்டி வரையான கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அவ்வேளைகளில் இக்கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த வான்பரப்பு மற்றும் கடல் எல்லைகளுக்குள் மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் கல்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அந்த கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அனுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/high-sea-turbulence-do-not-go-to-the-sea-until-further-notice-red-warning-for-fishermen-1780811450

NO COMMENTS

Exit mobile version