கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கியதாகக் கூறப்படும் விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பம்பலப்பிட்டியவின் ஓஷன் டவர் கட்டடத்தில் அமைந்திருந்த குறித்த நிலையத்தில் நேற்று இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அந்த இடத்தை நிர்வகித்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரும், விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பம்பலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்கள் 27, 35 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் எல்லகாவ, கலாவன மற்றும் கல்கமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 34, 41 மற்றும் 43 வயதுடைய தாய்லாந்து பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://samugammedia.com/brothel-raided-in-colombo–6-people-arrested-including-thai-women-1782019200
