Home இலங்கை “பொதுமன்னிப்பு கிடைத்தால் உண்மைகளை கூறுவேன்”! சோமரத்னவின் கோரிக்கையை கேள்விக்குட்படுத்திய அமைச்சர்

“பொதுமன்னிப்பு கிடைத்தால் உண்மைகளை கூறுவேன்”! சோமரத்னவின் கோரிக்கையை கேள்விக்குட்படுத்திய அமைச்சர்

0
image

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தனக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் மேலும் பல உண்மைகளை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாக கூறியுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் மற்றும் 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சோமரத்ன ராஜபக்ஷ வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சோமரத்ன ராஜபக்ஷ தொடர்பில், அவரது மனைவி எஸ்.சி. விஜேவிக்ரம கடந்த ஆண்டு ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், கிருஷாந்தி கொலை மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தன்னிடம் உள்ள தகவல்களை மீண்டும் விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் திகதி மற்றும் இவ்வாண்டு ஜனவரி 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் ஒன்றையும் அவர் அதிகாரிகளிடம் கையளித்திருந்ததுடன், செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல்கள் தொடர்பில் ஏற்கனவே பல தகவல்களை வழங்கியிருந்த போதிலும், இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமித்து முழுமையான விசாரணை நடத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், செம்மணி மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியை அண்மையில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, “நான் சோமரத்ன ராஜபக்ஷவை நேரில் சந்திக்கவில்லை. ஆனால் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் அவரைச் சந்தித்துள்ளார். அப்போது தனக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினால் உண்மைகளை வெளிப்படுத்துவதாக அவர் கூறியிருக்கிறார். உண்மையைச் சொல்ல விரும்புபவர் இவ்வாறு நிபந்தனை விதிப்பாரா?” என கேள்வி எழுப்பினார்.

Source: https://samugammedia.com/i-will-tell-the-truth-if-i-get-a-general-pardon-minister-questions-somarathnes-request-1782019050

NO COMMENTS

Exit mobile version