டெங்கு ஒழிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கே டெங்கு நோய் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் கொழும்பு மாவட்டக் கிளைத் தலைவர் அமித் குமார், டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்ட சில சுகாதார ஊழியர்களுக்கும் டெங்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
கொழும்பு மாவட்டம் முழுவதும் தற்போது டெங்கு பரவல் வேகமடைந்துள்ளதாக எச்சரித்த அவர், கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்புச் சோதனைகளின் போது, தங்களது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றாத 1,186 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதன் மூலம் மொத்தமாக ஒரு கோடியே 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் (10,225,000) அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜூன் மாதத்தில் மட்டும் 494 வீடுகள், 134 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், 4 பாடசாலைகள் மற்றும் 2 வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்காலத்திலும் எந்தவித சலுகையும் இன்றி டெங்கு கட்டுப்பாட்டு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எச்சரித்தார்.
இதற்கிடையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, இலங்கையில் டெங்கு நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதுடன், நாடு முழுவதும் இதுவரை 65,034 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
