கடந்த ஆண்டு வீசிய ‘டித்வா’ புயலின் கொடூரத் தாக்குதலால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்குப் புதிய விடியலாக, 1.3 மில்லியன் ரூபாய் செலவிலான 19 எஞ்சின் மீன்பிடிப் படகுகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று (13) நடைபெற்ற சிறப்பான நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இப்படகுகளை வழங்கி வைத்தார்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்:
புயலினால் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இழந்து பொருளாதார ரீதியாக முடங்கிய மீனவ குடும்பங்கள் மீண்டும் சுயமாகத் தொழில் தொடங்க இது பெருமுன்னெடுப்பாக அமைந்துள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமாரவின் நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீம, அமைச்சுச் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித்த கமல் ஜினதாச மற்றும் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ஆகியோர் கலந்துகொண்டு படகுகளைக் கையளித்தனர்.
துறைமுக அதிகாரிகள், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகளின் பங்களிப்போடு உணர்வுப்பூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வு, திருகோணமலை மீனவ சமூகத்தின் பொருளாதாரத்தை மீண்டும் நிமிரச் செய்யும் நம்பிக்கையை விதைத்துள்ளது.
