Home இலங்கை தென்மேல் பருவக்காற்றால் கொந்தளிக்கும் கடல்; இன்று பலத்த மழை

தென்மேல் பருவக்காற்றால் கொந்தளிக்கும் கடல்; இன்று பலத்த மழை

0
image

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வுக்கூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (5) இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவுக்குப் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் 

நாடு முழுவதும் வீசி வரும் பலத்த தென்மேல் பருவக்காற்று மற்றும் காலநிலை மாற்றம் காரணமாகப் புத்தளம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் – உடப்பு பகுதியில் வீசி வரும் கடுமையான காற்று காரணமாகக் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது. அலைகளின் சீற்றம் கரைபுரண்டு வருவதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கரையோர வீடுகள் சில சேதமடைந்துள்ளதுடன், பொதுமக்கள் சிலர் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அங்கு நீராடுவதைத் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது. 

மேலும், மலையக வீதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்களை முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு அவதானமாகச் செலுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Source: https://samugammedia.com/the-sea-raging-due-to-the-southwest-monsoon-heavy-rain-today-1780626527

NO COMMENTS

Exit mobile version