Home இலங்கை நீதியரசர்களின் ஓய்வு வயது உயர்வுக்கு எதிர்ப்பு – வீதியில் இறங்கவும் தயார் என சட்டத்தரணிகள் எச்சரிக்கை

நீதியரசர்களின் ஓய்வு வயது உயர்வுக்கு எதிர்ப்பு – வீதியில் இறங்கவும் தயார் என சட்டத்தரணிகள் எச்சரிக்கை

0
image

 

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் உயர்த்துவதற்கான அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள நிலையில், அதனை கைவிடுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு எச்சரித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பிரதம நீதியரசர் 67 வயதை அடையும் திகதி அல்லது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையும் திகதி ஆகிய இரண்டில் எது முந்தியதோ, அந்தத் திகதியே அவரது ஓய்வுபெறும் திகதியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அனுர மெத்தேகொட, சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக படிப்படியாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேவையேற்பட்டால் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடவும் தயங்கமாட்டோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியலமைப்பில் தற்காலிகத் திருத்தங்களை மேற்கொள்வதை விட, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என அனுர மெத்தேகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

Source: https://samugammedia.com/opposition-to-raising-the-retirement-age-of-judges–lawyers-warn-theyre-ready-to-take-to-the-streets-1786168450

NO COMMENTS

Exit mobile version