Home இலங்கை மட்டக்களப்பில் 9,500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மட்டக்களப்பில் 9,500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

0
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் வகையில், உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக சுமார் 9,500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரச அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாகவும் கவனமாகவும் பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (25) நடைபெற்றது.

இதன்போது, எல் நினோ தாக்கம் காரணமாக மாவட்டத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அவற்றை குறைப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், பிரஜாசக்தி வேலைத்திட்டங்கள், மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், புதிய வீடமைப்புத் திட்டங்கள், சிறு குளங்களை புனரமைத்தல், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மாவட்டத்தில் நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்தார்.

அத்துடன், மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையை விடுவித்தல், முந்தானையாற்றை அபிவிருத்தி செய்தல், கிரான் பொண்டுகள்–சேனைப் பால நிர்மாணப் பணிகள், மண்டூர்–குருமண்வெளி மற்றும் பட்டிருப்பு பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், அம்பிளாந்துறை–குருக்கள்மடம், திக்கிலிவெட்டை–சந்திவெளி மற்றும் நரிப்புல் தோட்டம்–பங்குடாவெளி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்படவுள்ள பாலங்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

மனித–காட்டு யானை மோதல், நெல் கொள்வனவு, களப்பு வாவியை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

Source: https://samugammedia.com/drinking-water-supply-to-9500-families-in-m-mattakkalapp–request-to-use-water-wisely-1787723944

NO COMMENTS

Exit mobile version