Home இலங்கை மாட்டிறைச்சிக் கழிவுகளை ஆற்றில் கொட்டிய இருவர் கைது; முச்சக்கரவண்டி பறிமுதல்

மாட்டிறைச்சிக் கழிவுகளை ஆற்றில் கொட்டிய இருவர் கைது; முச்சக்கரவண்டி பறிமுதல்

0
image

தலவாக்கலை – டெவோன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி எலும்புகள் உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை கொட்டியதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று (01) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கழிவுகளை எடுத்துச் சென்ற முச்சக்கரவண்டியும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொட்டகலை நகரில் மாட்டிறைச்சிக் கடை ஒன்றை நடத்தி வரும் உரிமையாளர், கழிவுகளை முறையாக அகற்றாமல், தினமும் மாட்டிறைச்சி எலும்புகள் மற்றும் ஏனைய கழிவுகளை தனது கடையில் பணிபுரியும் இரு ஊழியர்கள் மூலம் முச்சக்கரவண்டியில் ஏற்றி டெவோன் ஆற்றில் கொட்டி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி கே. சுதர்சனின் ஆலோசனையின் பேரில் பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, கொட்டகலை ரொசிட்டா பகுதியில் உள்ள 60 அடி ரயில்வே இரும்புப் பாலத்திற்கு அருகில் கழிவுகளை ஆற்றில் கொட்டிக்கொண்டிருந்த இருவரையும் கையும் மெய்யுமாகப் பிடித்ததாக பொது சுகாதார பரிசோதகர் தேவன் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, இருவருக்கும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்க நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, கழிவுகள் கொட்டப்பட்டு வந்த ஆற்றுப் பகுதிக்கு அருகில் கிறிஸ்டஸ் பார்ம் உள்ளிட்ட பல தோட்டங்களுக்குச் செல்லும் பாதைகள் அமைந்துள்ளதாகவும், இந்தச் சட்டவிரோத நடவடிக்கையால் அப்பாதைகளை தினசரி பயன்படுத்தும் பெருமளவான தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொட்டகலை நகரிலுள்ள கோழி இறைச்சிக் கடைகளின் கழிவுகளும் இதேபோன்று டெவோன் ஆற்றில் கொட்டப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளன

Source: https://samugammedia.com/two-people-arrested-for-dumping-beef-waste-into-the-river-three-wheeler-seized-1788333832

NO COMMENTS

Exit mobile version