Home இலங்கை முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கு புதிய சுற்றுநிருபம்: அமைச்சரவை அங்கீகாரம்

முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கு புதிய சுற்றுநிருபம்: அமைச்சரவை அங்கீகாரம்

0
image

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தி, முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் புதிய விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆண்டுதோறும் சுற்றுநிருபங்களும் வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, அனைத்து குழந்தைகளுக்கும் கல்விக்கான சமமான அணுகல் வாய்ப்பை உறுதிப்படுத்துதல், மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை பேணுதல் மற்றும் சேர்க்கை நடைமுறைகளில் ஏற்படக்கூடிய முறைகேடுகள், அநீதிகளை குறைப்பதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை வலுப்படுத்துதல் ஆகியவை முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இம்முறை அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சுற்றுநிருபம், கல்வி மறுசீரமைப்பு திட்டங்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு தரப்புகளின் ஆலோசனைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரின் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு புதிய விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய சுற்றுநிருபம் 2027 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதுடன், அதன்பிறகான ஆண்டுகளிலும் அரச பாடசாலைகளின் முதலாம் தர மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் ஆவணமாகப் பயன்படுத்தப்படவுள்ளது.

Source: https://samugammedia.com/new-round-of-notifications-for-first-year-student-admissions-cabinet-approval-1782222648

NO COMMENTS

Exit mobile version