Home இலங்கை முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையில் 214 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையில் 214 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

0
image

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று (25) வரையிலான காலப்பகுதியில் 215,526 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 214,333 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இலங்கையில் பரவலாகக் காணப்படும் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிக்கும் நோக்கில், 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் இந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஊடாக, நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை முடக்குதல், போதைப்பொருளுக்கான தேவையைக் குறைத்தல் மற்றும் அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பல்துறை அணுகுமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 3,112 பேர் தொடர்பில் தடுத்து வைக்கும் உத்தரவுகளைப் பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, மேலும் 360 சந்தேகநபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருளுக்கு அடிமையான 2,188 நபர்களை புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய போதைப்பொருட்களின் அளவுகளை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. 

69,951 சோதனைகளில் 1,963 கிலோ 863 கிராம் ஹெரோயின், 82,594 சோதனைகளில் 2,119 கிலோ 629 கிராம் ஐஸ் போதைப்பொருள், 189 சோதனைகளில் 288 கிலோ 864 கிராம் கொக்கைன் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

அத்துடன் 47,905 சோதனைகள் மூலம் 5,817 கிலோ 714 கிராம் கஞ்சா மற்றும் 12,899,201 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும், இந்த நடவடிக்கைகளின் போது 479 கிலோ 246 கிராம் குஷ் போதைப்பொருளும், 312 கிலோ 291 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Source: https://samugammedia.com/the-entire-nation-united-in-a-national-operation-over-214000-people-arrested-1782477437

NO COMMENTS

Exit mobile version