Home இலங்கை முஸ்லிம் சமூக உரிமைகள் குறித்து கல்முனையில் முக்கிய கலந்துரையாடல்!

முஸ்லிம் சமூக உரிமைகள் குறித்து கல்முனையில் முக்கிய கலந்துரையாடல்!

0
image

அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம் (NGO Bill), 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம் அரச ஊழியர்களின் கலாச்சார ஆடை அணியும் உரிமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று கல்முனை ஆசாத் பிளாசாவில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியர் சட்டத்தரணி வை.எல்.எம். யூசுப் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் 20-க்கும் மேற்பட்ட கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்.

இதன்போது, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம் உதவி சுகாதார ஊழியர்களின் கலாச்சார ஆடை அணியும் உரிமை மறுக்கப்பட்டமை ஆகிய மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின்போது முஸ்லிம் சமூகம் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டு அரசியல் மற்றும் சமூக ரீதியாக கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலங்கள் மற்றும் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் ஊடாக எதிர்காலத்திலும் முஸ்லிம் சமூகத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து ஆழமாக ஆராயப்பட்டுள்ளது.

அதேவேளை, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் NGO சட்டமூலத்தின் சாதக, பாதக அம்சங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

குறிப்பாக, முஸ்லிம்களின் சமய மற்றும் கலாச்சார நிறுவனங்கள், மதரஸாக்கள் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் எதிர்கால செயற்பாடுகளில் இந்த சட்ட ஏற்பாடுகள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது சமய மற்றும் கலாச்சார அடையாளங்களுக்கு ஏற்ப ஆடை அணியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு நிரந்தரமான சட்ட ரீதியான தீர்வு அவசியம் என்றும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் விரிவாக முன்வைக்கப்பட்டிருந்தாலும், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதற்காக ஊழலற்றதும் பொறுப்புணர்வுமிக்கதுமான சமூகத் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற முக்கியமான விடயங்களில் சமூகத்திற்கு தெளிவான வழிகாட்டல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது.

Source: https://samugammedia.com/important-discussion-in-kalmunai-on-muslim-social-rights-1788330627

NO COMMENTS

Exit mobile version