இலங்கையில் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ‘ஃபில்கிராஸ்டிம்’ (Filgrastim) மருந்தை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சிக்கல்களால் அரசாங்கத்திற்கு எந்தவித நிதி இழப்பும் ஏற்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோய் மருந்துத் தொகுதியை பரிசோதித்தபோது, அதிலுள்ள ஒவ்வொரு ஊசி மருந்திலும் உரிய லேபிள்கள் இல்லாதமை கண்டறியப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு குறித்த மருந்துத் தொகுதியை அரசாங்கம் நிராகரித்து, அதனை மீண்டும் சீனாவுக்கே அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அரசாங்கத்திற்கு எந்தவித நிதி இழப்பும் ஏற்படாது என தெரிவித்த அமைச்சர், நோயாளிகளுக்கான சிகிச்சை பாதிக்கப்படாத வகையில் மாற்று மருந்துகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரச வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய வைத்தியசாலைகளுக்கு உள்ளூர் சந்தையில் தரமான மருந்துகளை அவசரமாக கொள்வனவு செய்வதற்கான அதிகாரமும் நிதியும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை வெளிவிவகார அமைச்சராக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எனவும், அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை சிறப்பாக முன்னெடுத்து வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Source: https://samugammedia.com/unlabeled-vaccines—minister-says-they-were-sent-back-to-china-1789381942
