Home இந்தியா கிறிஸ்துமஸ் தினத்தில் சோகம் : கர்நாடகாவில் பேருந்து தீப்பிடித்து 17 பேர் உடல் கருகி பலி!

கிறிஸ்துமஸ் தினத்தில் சோகம் : கர்நாடகாவில் பேருந்து தீப்பிடித்து 17 பேர் உடல் கருகி பலி!

0

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில்17 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (25) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெங்களூருவிலிருந்து கோகர்ணா நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 48ல் சென்று கொண்டிருந்தது.

எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியது

இதன்போது எதிர் திசையில் வந்த கொள்கலன் லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதித் தடுப்பைத் தாண்டி வந்து பேருந்தின் மீது மோதியதால் பேருந்தின் எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதால், பேருந்து உடனடியாகத் தீப்பற்றியது.

பேருந்து முழுவதும் தீ பரவியதால், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பயணிகளால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் பலர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ள நிலையில் லொறியின் சாரதியும் விபத்தில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காவல்துறையினர் விசாரணை

தீக்காயமடைந்த மற்றும் படுகாயமடைந்த சுமார் 12க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு, சித்ரதுர்கா மற்றும் துமகூரு மாவட்ட வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், நீண்ட நேரம் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன் சித்ரதுர்கா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் கர்நாடகா மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version