ஹட்டன் நகரில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கு 2026ஆம் ஆண்டில் அவசியமான நகரத் திட்டம் தயாரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஹட்டன் நகரில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு குறுகிய கால துரித தீர்வை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
துரித தீர்வு
இதற்காக 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்ய முன்மொழிந்திருக்கின்றோம் என ஜனாதிபதி கூறினார்.
இதேவேளை, இரத்தினபுரி நகரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, பழைய நகரத்தில் அமைந்துள்ள அரசாங்க உத்தியோகபூர்வ வதிவிடங்களை புதிய நகர்ப் பகுதிக்கு இடமாற்ற முன்மொழியப்பட்டுள்ளது.
நீண்டகால வதிவிட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இதுபோன்ற இடமாற்றம் பயனுள்ளதாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
