Home முக்கியச் செய்திகள் 2500 புதிய ஆசிரியர் நியமனங்கள்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

2500 புதிய ஆசிரியர் நியமனங்கள்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

0

நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 2500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 03ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் அதிபர் அலுவலகத்தில் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அதன் படி, இரசாயனவியல், பௌதிகவியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சர்வதேச மொழிகள் ஆகிய பாடங்களுக்கு 2100 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஆங்கில மொழிமூல ஆசிரியர்கள்

மேலும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கில மொழிமூல உயர் டிப்ளோமா பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 500 ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன் மூலம் தேசிய பாடசாலைகளில் குறித்த பாடங்களுடன் தொடர்புடைய ஆசிரியர் வெற்றிடங்கள் பெருமளவில் நீங்கும் என அமைச்சர் கூறினார்.

இதேவேளை மாகாண மட்டத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

துரித வேலைத்திட்டம்

அத்துடன், ஆங்கில மொழிமூல ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது ஓய்வு பெற்ற ஆங்கில மொழிமூல ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

கல்வி நிர்வாக சேவை மற்றும் ஆசிரியர் கல்வி சேவை ஆகியவற்றில் உள்ள உத்தியோகத்தர் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் துரித வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version