யாழ்ப்பாணத்தில் (Jaffna) காவல்துறையினரின் அவசர அழைப்பு பிரிவின் 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பை
ஏற்படுத்திய நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியை சேர்ந்த 29 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
காவல்துறையினரின் 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நபர் ஒருவர் நேற்று (18) இரவு அழைப்பினை மேற்கொண்டு, குடும்ப தகராறு என கூறி அவசரமாக காவல்துறையினரின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளார்.
போதனா வைத்தியசாலையில் அனுமதி
அதனை அடுத்து, யாழ்ப்பாண காவல் நிலையத்தில் நடமாடும் தொலைபேசி சேவையில்
ஈடுபட்டிருந்த காவல்துறை குழு, தொலைபேசி அழைப்பில் கூறப்பட்ட வீட்டின் முகவரியை
கண்டறிந்து அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு காவல்துறையினர் சென்ற வேளை காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டதாக
நம்பப்படும் இளைஞன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில்
காணப்பட்டார்.
இதனை அடுத்து, நோயாளர் காவு வண்டிக்கு அறிவிக்கப்பட்டு,
நோயாளர் காவு வண்டி மூலம் இளைஞன் அழைத்து செல்லப்பட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
காவல்துறையினர் விசாரணை
எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என
வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
