முல்லைத்தீவில் இராணுவத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையைக் கண்டித்தும்,
அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறை என்பவற்றுக்கு
எதிர்ப்புத் தெரிவித்தும் நாளை(18) வடக்கு, கிழக்கில்
முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புக்கு தமிழ் பேசும் மக்களாக
ஒன்றினைந்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் தமது பூரண ஆதரவை மனப்பூர்வமாகத்
தெரிவித்துக் கொள்கின்றார்கள் என யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கு, கிழக்கில் நிலை கொண்டுள்ள அதிகரித்த இராணுவப் பிரசன்னத்தின் மூலமாக
உண்மையிலேயே மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதுடன், மக்களின் இயல்பு
வாழ்க்கையும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.
தமிழ் பேசும் மக்களாக
இராணுவ மயமாக்கலை வடக்கு,
கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் நீண்ட காலமாகவே எதிர்த்து வருகின்ற நிலையில்
அடக்குமுறையுடன், உயிர்ப்பலிகளும் இடம்பெறுவது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.
எனவே நாளை இடம்பெறும் பூரண கதவடைப்பு நடவடிக்கையில் யாழ்ப்பாணம்
முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்களாகப் பங்கெடுப்பதுடன், வடக்கு, கிழக்கில்
தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் – ஒற்றுமையையும் இதன்
மூலம் வெளிக்காட்டுவதற்குத் திடசங்கற்பம் எடுத்துள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு, கிழக்கில் றாளை இடம்பெறவுள்ள கதவடைப்பு போராட்டம் மிகவும் அவசியம் என்று கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர்
அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் உறவுகள் தங்களது
ஆதரவுகளை வழங்குமாறு இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தலைவரும்
தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
