Home இலங்கை அரசியல் இனவாதமற்ற இலங்கையை உருவாக்குவதாக உறுதியளித்த அநுர : முன்னாள் எம்.பி தெரிவிப்பு

இனவாதமற்ற இலங்கையை உருவாக்குவதாக உறுதியளித்த அநுர : முன்னாள் எம்.பி தெரிவிப்பு

0

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இனவாதமற்ற இலங்கையை உருவாக்குவதற்காக பாடுபடுவதாக என்னிடம் உறுதி அளித்திருந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) தெரிவித்துள்ளார்.

மன்னாரில் (Mannar)இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் என்னை சந்தித்து கதைத்த போது இனவாதமற்ற இலங்கையையும், இலஞ்ச ஊழல் அற்ற இலங்கையையும் உருவாக்குவதற்காக தான் பாடுபடுவதாக என்னிடம் உறுதி அளித்திருந்தார்.

தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

அந்த வகையில், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்க தனது உறுதி மொழியை தொடர்ச்சியாக இனவாதம் அற்ற நாடாக இலங்கை மாறுவதற்கும் இலஞ்ச ஊழல் அற்ற நாடாக இலங்கையை கொண்டு வருவதற்கும் முயற்சி செய்ய வேண்டும்.

அத்துடன் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர் நினைவில்வைத்து தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதை நான் அவரிடம் கோரிக்கையாக முன்வைக்கிறேன்.

ஜனாதிபதி தேர்தலின் போது நான் யாருக்காகவும், யார் சார்பாகவும் எந்த விடயங்களையும் கூறவில்லை. மக்கள் யாரை விரும்பி வாக்களிக்கிறார்களோ அது மக்களின் விருப்பம் என்பது எனது கருத்தாக இருந்தது.

பல்வேறுபட்ட குழப்பங்களுக்கு மத்தியில் இந்த ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

கடந்த 2 வருடங்களாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) கதைத்து மன்னார் மாவட்டத்தில் இருந்த சில பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைத்தேன்.

ரணிலின் வருகை 

முல்லைத்தீவிலும் சில பிரச்சனைகளுக்கு ரணில் விக்ரமசிங்க ஊடாக தீர்வை பெற்றுக் கொடுத்தேன். மக்களின் பிரச்சினைகளை நான் அவரிடம் முன்வைத்த போது சில விடயங்களை சுமுகமான முறையில் தீர்த்து வைத்தார்.

அண்மையில் ரணில் விக்ரமசிங்க யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

அதேபோல் அண்மையில் மன்னாருக்கு வருகின்ற போது எனது வீட்டிற்கு வரவுள்ளதாக கூறியிருந்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளடங்கலாக பல பிரச்சினைகளுக்கு சாதகமான பதிலை தந்ததன் அடிப்படையில் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கலந்தாலோசிக்கும் வகையில் அவரது வருகை அமைந்திருந்தது. அதன் அடிப்படையில் அவர் இங்கு வந்து சென்றிருந்தார்.

இந்தநிலையில் அண்மைக்காலமாக என் மீது சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version